'சடன் பிரேக்..' ரயில் முன் பாய்ந்த ஆசாமி.. துரிதமாகச் செயல்பட்ட ரயில் ஓட்டுநர்.. பகீர் வீடியோ
மும்பை: ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஒரு நபரின் உயிரைத் துரிதமாகச் செயல்பட்டு காப்பாற்றிய ரயில் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரயில் மோதி மனிதர்கள், விலங்குகள் என ஆண்டுதோறும் பலர் உயிரிழப்பது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. இதைத் தடுக்க ரயில்வே துறை சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் பெருமளவு பலன் அளிப்பதாக இல்லை.
சமீபத்தில் கூட கோவையில் இரவு நேரத்தில் ரயில் மோதியதில் கருவுற்று இருந்த பெண் யானை உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மும்பை ரயில்வே
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆகியுள்ள நிலையில், ரயில்வே துறை அமைச்சகம் நேற்றைய தினம் நெகிழ்ச்சி அளிக்கும் வகையிலான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஒரு நபர் அவசரக்கால பிரேக்கை பயன்படுத்தி ரயில் ஓட்டுநர் காப்பாற்றுகிறார். மும்பை புறநகர் ரயில் பாதையில் துறைமுகம் அருகே உள்ள செவ்ரி ரயில் நிலையத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த நபரின் உயிரைக் காப்பற்ற துரிதமாகச் செயல்பட்ட ஓட்டுநரை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவசரக்கால பிரோக்
சுமார் 50 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், ரயில் தண்டவாளத்தின் மீது ஒரு நபர் தள்ளாடியபடி வருகிறார். ரயில் நெருங்கி வரும்போது திடீரென அந்த நபர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார். ரயில் அருகே வந்துவிட்ட போதிலும், அந்த நபர் தண்டவாளத்தில் இருப்பதைப் பார்த்த லோகோ பைலட் உடனடியாக அவசரக்கால பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்துகிறார். அதன் பின்னர் அருகிலிருந்த ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே போலீசார் அந்த நபரைப் பிடித்துச் செல்கின்றனர்.

ரயில்வே அமைச்சகம்
நேற்று. ஜனவரி 2ஆம் தேதி காலை 11.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டரில், "மும்பையில் உள்ள செவ்ரி நிலையத்தில், ரயில் பாதையின் நடுவில் இருந்த நபரைப் பார்த்த ரயில் ஓட்டுநர், உடனடியாக அவசரக்கால பிரேக்கைப் பயன்படுத்தி, அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினார். வாழ்க்கை விலைமதிப்பற்றது. துரிதமாகச் செயல்பட்ட லோகோ பைலட்டிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளனர்.

பாராட்டு
ரயில்வே துறை அமைச்சகம் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். லோகோ பைலட்டின் சிறப்பான செயல் காரணமாகவே விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்,












Click it and Unblock the Notifications