நடுவானில் தூங்கி வழியும் பைலட்கள்.. பெரும்பாலான இந்திய விமானிகள் இப்படிதானாம்! ஷாக் தரும் சர்வே
மும்பை: இந்திய விமானிகள் குறித்து எடுக்கப்பட்ட புதிய சர்வே ஒன்றின் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியாவில் விமான போக்குவரத்து என்பது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி, சென்னை, மும்பை போன்ற விமான நிலையங்கள் ஆண்டுக்குப் பல நூறு விமானங்களை இயக்குகின்றன.
அதேபோல பாதுகாப்பிலும் விமான போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. இதனிடையே இந்திய விமானிகள் பற்றிய அதிர்ச்சி சர்வே ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் இன்றே கடைசி - கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு - அமைச்சர் மா சுப்பிரமணியன்!
பெரும்பாலான விமானிகள்
விமானத்தின் ஒட்டுமொத்த கன்டிரோலையும் விமானிகள் தங்கள் கையில் வைத்து இருப்பார்கள். பயணிகள் அனைவருமே விமானியின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே இந்தியப் பயணிகளில் சுமார் 66% பேர் இணை விமானியிடம் சொல்லாமலேயே காக்பிட்டில் தூங்கியதாகத் தெரிவித்து உள்ளனர். அல்லது பணியில் இருக்கும் போது அவர்களை அறியாமலேயே அவர்கள் தூங்கியதையும் ஒப்புக் கொண்டு உள்ளனர்.
தூக்கம்
தேசிய மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கும் 542 இந்திய பைலட்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது. அதில், "சுமார் 54% விமானிகள் கடுமையான பகல் நேரத் தூக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல 41% பேர் லேசான பகல் நேரத் தூக்கப் பிரச்சினையை எதிர்கொண்டு உள்ளனர். இதுவே 66% விமானிகள் திடீரென காக்பிட்டில் மைக்ரோ-ஸ்லீப்பை எதிர்கொள்ளக் காரணமாக உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காரணம்
அதிகரிக்கும் பணிச்சுமையே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. விமானி ஒருவருக்குச் சோர்வு அதிகரிக்கும்பட்சத்தில் அவரால் தெளிவாக யோசித்துச் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. இப்போது நடக்கும் பெரும்பாலான விமான விபத்துகளுக்கு விமானியின் சோர்வே முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது விமானத்தின் பாதுகாப்பில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.
விமான விபத்து
கடந்த 2010ஆம் ஆண்டு மங்களூரில் மிக மோசான விமான விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் பயணித்த 158 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இதுவும் கருதப்படுகிறது. அந்த விமானத்தை இயக்கிய பைலட் 2.5 மணி நேர விமானத்தில் 1.40 மணி நேரம் தூங்கியது குறிப்பிடத்தக்கது.
அதிகாலை நேரம்
அதிகாலை நேரத்தில் இருக்கும் விமான புறப்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என்று 74% விமானிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கேப்டன் அமித் சிங் கூறுகையில், "காலை 6 மணிக்கு விமானம் புறப்பட வேண்டும் என்றால் எப்போது எழுவீர்கள் என்று விமானிகளிடம் கேட்டோம். அதற்கு பெரும்பாலான விமானிகள் அதிகாலை 3 மணி முதல் 3:30 மணிக்கு எழுந்து இருப்போம் எனத் தெரிவித்தனர்.
ஓய்வு முக்கியம்
இந்த அதிகாலை நேரம் என்பது உடல் ஓய்வெடுக்கும் முக்கிய நேரம் ஆகும். இந்த நேரத்தில் தான் நமது உடலுக்கு ஓய்வு நிச்சயம் தேவை. ஆனால், தொடர்ச்சியாக இந்த நேரத்தில் எழுவது என்பது நமது உடல்நிலையைப் பாதிக்கும்" என்று அவர் தெரிவித்தார். விமானிகள் இப்போதெல்லாம் தினரசி 10-12 மணி நேரம் வரை விமானங்களை இயக்க வேண்டி உள்ளதால் விமானிகள் எளிதாகச் சோர்வடைகிறார்கள்.