கர்நாடகாவில், கோவில், மடங்களை அழித்தாரா சத்ரபதி சிவாஜி? வெடித்த விவாதம்
மைசூர்: சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மைசூர் மன்னர் குடும்ப வாரிசு, யதுவீர் உடையார் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த வாழ்த்துச் செய்தி, எதிர்பாராத விதமாக விவாதத்தை உருவாக்கியுள்ளது. உடையார் மீதே படையெடுத்தவர்தான் சிவாஜி என சுட்டிக்காட்டும் வகையில் ஒரு பத்திரிகையாளர் பதிவு செய்ததால், சமூக ஊடகங்களில் கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.
யதுவீர் உடையார் தனது எக்ஸ் பதிவில், "சத்ரபதி சிவாஜி மகாராஜ், ஸ்வராஜ்யத்தின் ஸ்தாபகர், அஞ்சாத வீரர், மற்றும் கொடுங்கோன்மையை எதிர்த்து நீதியான மற்றும் வளமான மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அவரது நிர்வாகம், ராணுவ உத்திகள், மற்றும் தர்மத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவின் சுயராஜ்ய உணர்வைத் தொடர்ந்து வடிவமைத்து வருகின்றன. அவரது ஸ்வராஜ்யம், நீதி மற்றும் நல்லாட்சி லட்சியங்கள் ஒரு வலுவான மற்றும் தன்னிறைவு தேசத்திற்கான அடித்தளத்தை அமைத்தன. அவரது பிறந்தநாளில், நான் மாபெரும் சத்ரபதிக்கு மரியாதை செலுத்துகிறேன், யாருடைய பாரம்பரியம் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. நாம் எப்போதும் தைரியம், நேர்மை, மற்றும் நமது தாய்நாட்டின் மீது பற்று கொண்ட பாதையில் நடக்க வேண்டும்." என்று தெரிவித்திருந்தார்.

இந்த வாழ்த்துக்கு எதிர்வினையாக, கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர், ரீட்வீட் செய்திருந்தார். "அரசியல் காரணங்களுக்காக வரலாற்று உண்மைகளை மறந்துவிட முடியாது. மராட்டியர்கள், கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தி கோவில்கள் மற்றும் மடங்களை அழித்த வரலாறு உண்டு," என கடுமையாக விமர்சித்தார்.
இந்த விவாதத்தில், பாஜக ஆதரவாளர்கள் பத்திரிகையாளரின் கருத்தை தவறான தகவல் என்று விமர்சித்துள்ளனர். அவர்களின் கருத்துப்படி, சிவாஜி ஒரு தேசிய வீரர் மற்றும் அவரது பாரம்பரியம் இந்தியாவின் ஒற்றுமைக்கு முக்கியமானது. அப்போது மராத்தி, கன்னடம் என்பது கிடையாது. ராஜாக்கள் படையெடுப்பதும், சண்டையிடுவதும் மொழியின் பெயரால் இருந்தது கிடையாது என்று தெரிவிக்கிறார்கள்.

மறுபுறம், காங்கிரஸ் ஆதரவாளர்கள், பத்திரிகையாளரின் கருத்தை ஆதரித்து, சிவாஜி, மைசூர் உடையார் அரசர்கள் மீது பலமுறை படையெடுத்ததாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன என்று கூறுகின்றனர். வரலாற்று உண்மைகளை மறைப்பது சரியல்ல, மேலும் இது போன்ற விவாதங்கள் வரலாற்று நிகழ்வுகளை முழுமையாக புரிந்துகொள்ள உதவும் என்கிறார்கள் அவர்கள்.












Click it and Unblock the Notifications