திமுகவிலிருந்து பாஜக போனார்.. மீண்டும் திரும்பி வந்த வேதரத்தினம்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.வேதரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
அண்மையில் பாஜகவில் வெளியிடப்பட்ட மாநில நிர்வாகிகள் பட்டியலில் எஸ்.கே.வேதரத்தினத்துக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாததால் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

எளிமை மனிதர்
நாகை மாவட்ட வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ.வாக திமுக சார்பில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றிபெற்றவர் எஸ்.கே.வேதரத்தினம். 1996,2001,2006 என மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் எளிமையின் சின்னமாக திகழ்ந்தார். தொகுதி மக்களால் எஸ்.கே.வி. என உரிமையோடும், வாஞ்சையோடும் அழைக்கப்படும் இவர் மக்களின் நல்லது கெட்டதுகளில் முதல் ஆளாக பங்கெடுப்பவர். இப்படிப்பட்ட இவர் நாகை மாவட்ட திமுகவில் நிலவிய உட்கட்சி பூசலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 2015-ல் கட்சியில் இருந்து வெளியேறினார்.

வேதரத்தினத்துக்கு குடைச்சல்
மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்ததால் வேதாரண்யம் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றி வைத்திருந்தார் வேதரத்தினம். இந்நிலையில் கட்சியில் வேதரத்தினத்தின் செல்வாக்கு உயர்ந்து வந்த நிலையில் அப்போதைய நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் கொடுத்த குடைச்சலால் வெறுத்துப்போய் திமுகவிற்கு கும்பிடு போட்டுவிட்டு பாஜகவில் இணைந்தார். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 22,000 வாக்குகள் பெற்று திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

மக்கள் செல்வாக்கு
எஸ்.கே.வேதரத்தினத்தை பொறுத்தவரை கட்சி செல்வாக்கை காட்டிலும் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கை உருவாக்கி வைத்திருப்பவர். இன்றும் எஸ்.கே.வி.தான் அந்த தொகுதி மக்களின் செல்லப்பிள்ளை. காரணம் நள்ளிரவில் ஒரு பிரச்சனை என்று போய் நின்றால் கூட அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை பாதிக்கப்பட்டவர்களுடன் உடனிருப்பார். மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து மாஸ் மனிதராக தன்னை வளர்த்துக்கொண்டார்.

3 இடங்கள்
எஸ்.கே.வேதரத்தினத்தின் செல்வாக்குக்கு உதாரணமாக ஒன்றை கூற வேண்டும் என்றால், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி வேதாரண்யத்தில் பிரச்சாரம் செய்ததை கூறலாம். மொத்தமாக பிரதமர் மோடி பரப்புரை நிகழ்த்திய இடங்களே 3 தான். அதில் வேதரத்தினத்துக்கு உள்ள நற்பெயர், மக்கள் ஆதரவு உள்ளிட்ட தகவல்களை உளவுத்துறை மூலம் அறிந்தே வேதாரண்யத்தை தேர்வு செய்தார் பிரதமர் மோடி.

வேதரத்தினம் அதிருப்தி
இந்நிலையில் பல மாதங்களாக தமிழக பாஜகவுக்கு தலைவர் இல்லாத நிலை இருந்தபோதே வேதரத்தினத்தின் ஆதரவாளர்கள் மீண்டும் தாய்கழகமான திமுகவில் இணைந்துவிடுவோம் என அவரை கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ பொறுமையாய் இருப்போம் புதிய தலைவர் நியமிக்கப்பட்டவுடன் கட்சி தன்னை நிச்சயம் அங்கீகரிக்கும் என கூறி வந்திருக்கிறார். இதனிடையே அன்மையில் வெளியிடப்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் பட்டியலை பார்த்து அதிருப்தியில் இருந்த வேதரத்தினத்தை திமுக தனது பக்கம் அழைத்துக்கொண்டது.

திமுக உறுதி
பழைய கசப்பான அனுபவத்தை மறந்துவிடுமாறும் திமுகவில் உரிய கவுரவம் தரப்படும் எனவும் எஸ்.கே.வி.க்கு உறுதி தரப்பட்டுள்ளதால் அவரும் உற்சாகமாக தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் திமுகவில் இணைந்துவிட்டார். திமுகவில் இருந்து விலகி வி.பி.துரைசாமி அண்மையில் பாஜகவில் இணைந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்தக் கட்சியில் இருந்து ஒருவரை இணைத்துள்ளது திமுக முகாம்.












Click it and Unblock the Notifications