அதிமுக ‘மாஜி’ வீட்டில் அதிரடியாக இறங்கிய அதிகாரிகள்.. ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை
நாமக்கல் : அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பீடு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேபிபி பாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.
10 ஆண்டுகளாக நாமக்கல் எம்.எல்.ஏவாக இருந்த கேபிபி பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் சோதனை நடைபெற்றது.
அந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து பத்திரங்களின் அடிப்படையில், சொத்துகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது.

அதிமுக மாஜி எம்.எல்.ஏ
நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ கேபிபி பாஸ்கர். இவர் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம் எம்.எல்.ஏவாக இருந்தார். அந்த காலகட்டத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும் புகார் எழுந்தது.

அதிரடி ரெய்டு
எனவே இது சம்பந்தமாக கேபிபி பாஸ்கர் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கேபிபி பாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆவணங்கள், ரொக்கம் பறிமுதல்
இந்த அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கப் பணம் மற்றும் 3 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இன்று முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டிற்கு வந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அவரது சொத்து மதிப்பீடு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சொத்து மதிப்பீடு
ரெய்டின்போது கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் கே.பி.பி.பாஸ்கர் சொத்துகளை ஆய்வு செய்து மதிப்பிடும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. மேலும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோரிடம் சொத்துகள் குறித்தும் ஆவணங்கள் குறித்தும் விசாரித்து மதிப்பிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications