"தமிழக அரசின் வேட்டை தொடரும்.." அமைச்சர் சேகர்பாபு அதிரடி!! அர்ச்சகர் பள்ளி குறித்தும் முக்கிய தகவல்
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநில இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயிலுக்கு உட்பட்ட செல்லாண்டி அம்மன் திருக்கோவில் நிலத்தைப் பார்வையிட்டார்.
Recommended Video
தொடர்ந்து நைனாமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அமைக்கப்பட உள்ள மலைப்பாதை பணிகளை ஆய்வு செய்தார். மேலும் இராசிபுரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்கள் திருப்பணிகளை ஆய்வு செய்த பின்னர் அத்தனூர் அம்மன் திருக்கோவிலை பார்வையிட்டார்.
முன்னதாக, நாமக்கல்லில் அரங்கநாதர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் வளாகத்திலேயே அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்துக்கு எதிரான அரசா
அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "திமுக தலைமையிலான இந்த அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஆன்மீகவாதிகளை அரவணைத்துச் செல்கிறது. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் நள்ளிரவு 12 மணிமுதல் புத்தாண்டு வழிபாடுகளுக்கு அரசு அனுமதி வழங்கியது.

கோயில்களில் குடமுழுக்கு
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு செய்ய வேண்டிய கோவில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. சோளிங்கர் திருக்கோவிலில் சுற்றுச்சுவர் பணிகளை மேம்படுத்த தொல்லியல் துறையின் அனுமதியுடன் பணிகள் தொடங்கப்பட உள்ளது. அங்கு, முன்பு இருந்தது போல நாச்சியார் திருக்கோவில் அமைத்துத் தரப்படும்.

நகைகளை உருக்கும் பணி
திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோவில்களில் உள்ள தங்க நகைகளைப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் அறங்காவலர் குழு நியமித்து மத்திய அரசின் உருக்கு ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நகைகளை உருக்கும் பணி நடைபெறும். பரம்பரை அறங்காவலர் இருக்கின்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்ளிட்ட கோயில்களில் நகைகளை உருக்க இந்து சமய அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்டு, விண்ணப்பித்துள்ளனர். அந்தப் பணி விரைவில் மேற்கொள்ளப்படும்.

கோயில்களில் ரோப்கார்
நாமக்கல் அருகே உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மலைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகச் சுற்றுலாத் துறை அமைச்சருடன் இன்று ஆய்வு செய்துள்ளோம். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி அமைக்க முடியுமா என்பது குறித்து தனியார் நிறுவனத்துடன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அதன் பின்னர் முடிவெடுக்கப்படும்.

வேட்டை தொடரும்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் 437 நபர்களிடம் இருந்து 1,640 கோடி ரூபாய் அளவிற்குக் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும். நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கோவில்களைப் பாதுகாக்கும் வகையில், இந்தியத் தொல்லியல் துறையின் முறையான அனுமதி பெற்றுப் புனரமைப்பு பணிகளுக்குத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். அதற்கான குழுவை நியமித்து திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களைக் கோவில்களில் அர்ச்சகர்களாக அமைக்கலாம் என வழிகாட்டியுள்ளதைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 24 பேர்களுக்குப் பணி நியமன ஆணைகளைத் தமிழக முதலமைச்சர் வழங்கி உள்ளார். அர்ச்சகர், வேத பாராயணல், இசை உள்ளிட்ட பள்ளிகளை அதிகளவில் துவக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்தப் பயிற்சி பள்ளிகளில் ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை தமிழக அரசால் 3000 ரூபாய் ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பள்ளிகள் மேம்படுத்தவும் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற கொள்கையில், மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்குத் தமிழக முதலமைச்சர் ஆதரவளிப்பார். மக்களைப் பாதிக்கும் திட்டம் என்றால் அதை எதிர்ப்பார். தமிழகத்தின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர் செயலாற்ற வேண்டும். நடக்கும் நலத்திட்டப் பணிகளுக்குத் தடைக்கல்லாக இல்லாமல் படிக்கல்லாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications