இந்தியா மீது வரி.. டிரம்ப் நினைத்தே பார்க்காத பின்னடைவு ..அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் அவசர முறையீடு
நியூயார்க்: கடந்த 1977-ம் ஆண்டின் சர்வதேச அவசர நிலை பொருளாதார அதிகார சட்டப்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, ரஷ்யா, சீனா, கனடா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு சரமாரியாக வரி விதித்தார். இந்நிலையில் இந்த வரிவிதிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அமெரிக்க வரிவிதிப்பு சட்டவிரோதம் என்ற தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் டொனால்ட் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விரைவில் விசாரிக்க வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் யாரும் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று எச்சரித்தார். எனினும், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடம் ஆயில் வாங்கி வருகின்றன. இந்த பணம் தான் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர முடியாததற்கு காரணம் என்று கூறிய டிரம்ப், வரி விதிக்கப் போவதாக அறிவித்தார். அதன்படியே வரிகளை விதித்தார். இந்தியாவிற்கு 50 சதவீதம் என்கிற அளவிற்கு வரி விதித்துள்ளார். இதேபோல் சீனா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்துள்ளார்.

அதிகாரம் என்ன
உலகின் பல்வேறு நாடுகளுக்கு வரிவிதிக்க அமெரிக்க அதிபருக்கு டிரம்ப்புக்கு சட்ட விதிகள் அந்த நாட்டில் அனுமதிக்கின்றன. கடந்த 1977-ம் ஆண்டின் சர்வதேச அவசர நிலை பொருளாதார அதிகார சட்டம் மூலம் பிற நாடுகள் மீது வரி விதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. முன்னதாக அந்த அதிகாரம் எம்.பி.க்கள் கையில் தான் இருந்தது. அதனை படிப்படியாக அதிபருக்கு கொடுத்து விட்டனர். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்து வருகிறார்.
சட்டவிரோதம்
அதற்கு எதிராக அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த கோர்ட்டு, டிரம்ப் வரி விதித்தது சட்டவிரோதம் என்று அறிவித்தது. அவசரநிலை சட்டத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வரி விதித்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஆன்லைன் மூலம் 251 பக்க மனு தாக்கல் செய்தது.
டிரம்ப் அரசு மேல்முறையீடு
அதில், அமெரிக்க அரசின் சொலிசிட்டர் ஜெனரல் டி.ஜான் சாயர் கூறுகையில், "அமெரிக்க அரசின் வரி விதிப்பு சட்டவிரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவால் கடந்த 5 மாதங்களாக அதிபர் டிரம்ப், வெளிநாடுகளுடன் மேற்கொண்டு வரும் வர்த்தக பேச்சுவார்த்தையில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை முடிவடைந்த ஒப்பந்தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவிற்கு வரி விதிப்பு ஏன்
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அதிபர் டிரம்ப் அண்மையில் வரி விதித்தார். உக்ரைனில் அமைதியை கொண்டு வரவும் இதை செய்திருக்கிறார். வரிவிதிப்பது அமைதியை உருவாக்கும், வரலாறு காணாத பொருளாதார வளத்துக்கு உதவும் என்று அதிபரும், அமைச்சர்களும் நினைக்கிறார்கள்.
பாதுகாக்க முடியாது
அதேநேரம், வரிவிதிக்க அனுமதி மறுப்பது மற்ற நாடுகளின் வர்த்தக பதிலடிக்கு அமெரிக்காவை உள்ளாக்கி விடும், அமெரிக்காவை பெரும் பொருளாதார பேரழிவுக்கு தள்ளிவிடும் என்று அதிபரும், அமைச்சர்களும் கருதுகிறார்கள். அத்துடன் தற்போதைய வர்த்தக பேச்சுவார்த்தைக்கு இடையூறாக மாறும். தேச பாதுகாப்பையும், பொருளாதார நலனையும் அரசால் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும்.
2 லட்சம் கோடி டாலர்
வரிவிதிப்பின் பலனாக 6 பெரிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. 2 லட்சம் கோடி டாலர் கொள்முதலுக்கும், முதலீடுக்கும் சம்மதித்துள்ளன. ஆகவே, இந்த மேல்முறையீட்டு மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நவம்பர் மாதம் வாதங்கள் நடத்த வேண்டும்" இவ்வாறு அமெரிக்க அரசின் சொலிசிட்டர் ஜெனரல் டி.ஜான் சாயர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications