மிகவும் வலுவான விவாதம் நடக்கிறது.. இந்தியாவின் ஜனநாயகத்தை மதிக்கிறோம்.. அமெரிக்கா பாராட்டு!
இந்தியாவில் குடியுரிமை மற்றும் மத ரீதியான சுதந்திரம் குறித்து வலுவான விவாதங்கள் நடத்தப்படுகிறது, என்று அமெரிக்காவின் தலைமை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: இந்தியாவில் குடியுரிமை மற்றும் மத ரீதியான சுதந்திரம் குறித்து வலுவான விவாதங்கள் நடத்தப்படுகிறது, இந்தியாவின் ஜனநாயகத்தை இதற்காக பாராட்ட வேண்டும் என்று அமெரிக்காவின் தலைமை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
அசாமில் 7 நாட்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் இது. இந்த சட்டம் செயல்பட தொடங்கினால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் இந்த போராட்டத்திற்கான காரணம்
சந்திப்பு
இந்தியாவில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்கா சென்று இருக்கிறார்கள். அவர்கள் அங்கு அமெரிக்காவின் தலைமை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் உடன் சந்திப்பு நடத்தினார்கள்.
என்ன சொன்னார்
இந்த சந்திப்பில் பேசிய அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவில் மத ரீதியான ஒடுக்குமுறைகள் எதுவும் செய்யப்படவில்லை. பிற நாடுகளில் மத ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கு நாங்கள் அடைக்கலம் தருகிறோம். அண்டை நாடுகளில் மத ரீதியாக வெளியேற்றப்படும் மக்களுக்கு நாங்கள் குடியுரிமை தருகிறோம். அதுதான் எங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
என்ன பதில்
இதற்கு பதில் அளித்த மைக் பாம்பியோ, நாங்கள் உலகம் முழுக்க எப்போது மத ரீதியான செய்திகளை , நடவடிக்கைளை கவனித்து வருகிறோம். இந்தியாவில் நடப்பதையும் கவனித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கு பிரச்சனை ஏற்பட்ட போது அதற்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறோம்.
இந்தியாவிற்கு பாராட்டு
இந்தியாவில் குடியுரிமை மற்றும் மத ரீதியான சுதந்திரம் குறித்து வலுவான விவாதங்கள் நடத்தப்படுகிறது, இந்தியாவின் ஜனநாயகத்தை இதற்காக பாராட்ட வேண்டும் என்று அமெரிக்காவின் தலைமை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். ஆனால் இதில் இந்தியாவின் குடியுரிமை கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது என்ன என்று இன்னும் முழு விபரம் வெளியாகவில்லை.