நியூயார்க் தேர்தலில் களமிறங்கும் பாலிவுட் இயக்குநரின் மகன்.. அமெரிக்க அரசியலையே மாற்றும் மம்தானி
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு விரைவில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அந்த மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகனுமான ஜோஹ்ரான் மம்தானி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அவர் ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்க இருக்கிறார்.
அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று நியூயார்க். இதை அமெரிக்காவின் பொருளாதார தலைநகர் என்றே சொல்லலாம். அமெரிக்கப் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும் நகரமாக நியூயார்க் இருக்கிறது. மேலும், அமெரிக்காவின் முதல் தலைநகராக 1785 முதல் 1790 வரை இருந்தது நியூயார்க் தான்.

அந்தளவுக்கு வரலாறு ரீதியாகவும் அதிகார ரீதியாகவும் நியூயார்க் நகருக்கு அமெரிக்காவில் முக்கியமான இடம் இருக்கிறது. இந்த நியூயார்க் நகரின் மேயர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது.
மேயர் தேர்தல்
அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தலாக இருந்தாலும் சரி, மேயர் தேர்தலாக இருந்தாலும் சரி விரும்பிய யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் தலைமை தான் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால், ஒரு கட்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்குக் கட்சிக்குள்ளே தேர்தல் நடத்தப்படும். இதை அங்கு Primary எனச் சொல்வார்கள். அந்த உட்கட்சி தேர்தலில் யார் வெல்கிறார்களோ.. அவர்களே வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
ஜோஹ்ரான் மம்தானி
அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, பிராட் லேண்டர் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் ஜோஹ்ரான் மம்தானிக்கு தான் செல்வாக்கு அதிகமாக இருந்தது. உட்கட்சி தேர்தலில் மொத்தம் 89 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், அதில் ஜோஹ்ரான் மம்தானிக்கே அதிகபட்சமாக 44 சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன. குவோமோவுக்கு வெறும் 36 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதன் மூலம் மேயர் தேர்தலில் மம்தானி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அங்கு குடியரசு கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிடுகிறார். குடியரசு கட்சியில் வேறு யாரும் போட்டியிட விருப்பம் தெரிவிக்காததால் கர்டிஸ் ஸ்லிவா போட்டியின்றி தேர்வானார். இதன் மூலம் வரும் நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் மம்தானி மற்றும் கர்டிஸ் இடையேயான போட்டி உறுதியாகியுள்ளது.
யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி!
இந்தியாவில் பிறந்த உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குநர் மீரா நாயர் ஆகியோரின் மகன் தான் 33 வயதான சோஹ்ரான் மம்தானி. அவரது தாய் மீரா நாயர் பாலிவுட் படங்களை இயக்கியுள்ளார். உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்து வளர்ந்த மம்தானி, தனது ஏழு வயதில் தனது பெற்றோருடன் நியூயார்க்கிற்குக் குடிபெயர்ந்தார். கடந்த 2018ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் சிரியாவை சேர்ந்த பெண்ணை மணந்தார்.
மம்தானி மெயின் மாநிலத்தில் உள்ள போடோயின் கல்லூரியில் ஆப்பிரிக்கனா ஆய்வுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர். அரசியல் வாழ்க்கையில் நுழைவதற்கு முன்பு, அவர் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். 2020இல் அவர் நியூயார்க் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்தார். இந்தச் சூழலில் தான் அடுத்த கட்டமாக அவர் நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
அமெரிக்க அரசியல்
இவர் டெமாக்ரடிக் சோசலிஸ்ட் கொள்கை கொண்டவர். அமெரிக்காவில் பொதுவாகவே சோசலிஸ்ட் கொள்கையைக் கொண்டவர்களுக்கு ஆதரவு பெரியளவில் கிடைக்காது. ஆனால், அதை மாற்றும் வகையில் மம்தானிக்கு ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. மம்தானிக்கு ஏற்கனவே அமெரிக்காவில் பல காலமாக சோசலிஸ்ட் கொள்கையை வலியுறுத்தும் பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்டோரின் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications