சல்மான் ருஷ்டியை தாக்கிய நபரை பாராட்டி எழுதிய ஈரானிய பத்திரிக்கை; யார் எழுதியது?
நியூயார்க்: 'சாத்தானின் வசனங்கள்' எனும் புத்தகத்தை எழுதியதற்காக இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை ஈரான் நாட்டை சேர்ந்த பத்திரிகை ஒன்று பாராட்டியுள்ளது.
இவருடைய இந்த சர்ச்சை புத்தகத்தை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்தவர் ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட நிலையில், நீண்ட நாட்களாக ருஷ்டிக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணமிருந்தன.
சல்மான் ருஷ்டி சென்னையை மையப்படுத்தி எழுதிய சிறுகதை: அடுத்த நாவல், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டது
புத்தகம்
இந்திய சுதந்திரம் அடைந்த 1947ல் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவராவார். இந்நிலையில் 1988ல் அவர் எழுதிய 'சாத்தானின் வசனங்கள்' எனும் புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அவருடைய உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. இந்த புத்தகம் முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் சல்மான் ருஷ்டியின் புத்தகத்திற்கு தடை விதித்தன. பல முஸ்லீம் நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த புத்தகம் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
எச்சரிக்கை
ஈரானைச் சேர்ந்த மதகுருவான ஆயத்துல்லா ருஹோலா என்பவர் சல்மான் ருஷ்டியை முஸ்லீம்கள் பார்த்த இடத்தில் கொன்று விடுங்கள் என வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால் சல்மான் ருஷ்டி அச்சத்துடனேயே வாழ்ந்து வரும் சூழல் இருந்தது. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள சாட்டகுவா நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். பின்னர் பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேடைக்கு சென்று மறைத்து வைத்திருக்கும் கத்தியால் குத்தினார்.
தாக்குதல்
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ருஷ்டி தற்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவரது ஒரு கண் பார்வை பறிபோவதற்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளவர் 24 வயதுடைய ஹாடி மாதர் என்பதும் இவருக்கு ஷியா தீவிரவாதத்திடம் அனுதாபம் இருக்கலாம் என்றும் காவல்துறையில் சந்தேகித்துள்ளனர்.
பாராட்டு
இந்நிலையில் ஈரான் நாட்டின் 'ஹார்ட்லைன் கய்ஹான்' செய்திதாள் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட ஹைதி மாதரை பாராட்டி எழுதியுள்ளது. அதில் அந்நாட்டின் அரசியல் தலைவர் அலி கமேனி, "விசுவாசதுரோகி சல்மான் ருஷ்டியை தாக்கிய துணிச்சலான, கடமையை தவறாத நபருக்கு ஆயிரம் பாராட்டுகள். கடவுளின் எதிரியின் கழுத்தைக் கிழித்தவரின் கையை முத்தமிட வேண்டும்" என எழுதியுள்ளார். 'ஹைடி மாதர்' மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாதுகாப்பு அம்சங்கள்
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்ப நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மெட்டல் டிடக்டர் உள்ளிட்ட அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுவாக எழுத்தாளர்கள் சந்திப்பில் இப்படியான உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்துவது என்பது எழுத்தாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.