தெனாவட்டாக பேசிய ஜெலன்ஸ்கி.. என்ன? குரலை உயர்த்திய ஜோ பிடன்.. அலறிய உக்ரைன்! ஷாக் தகவல்
நியூயார்க்: உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய போது, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திடீரென பொறுமை இழந்து கோபத்தில் கத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, இந்த தொலைப்பேசி உரையாடல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் என்பிசி தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு உறுதுணையாக இருந்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சட்டென இப்படி கோபப்பட்டதற்கான காரணத்தையும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷி சுனக் பெயரை 'ரஷீத் சனூக்' என்று உச்சரித்த ஜோ பைடன்.. கலாய்த்து மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்!

பின்வாங்கிய அமெரிக்கா..
நேட்டோ கூட்டமைப்பில் இணையும் முயற்சிகளை உக்ரைன் மேற்கொண்டதால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக போர் தொடுத்தது. உக்ரைன் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா களத்தில் இறங்கும் என அதிபர் ஜோ பிடன் நேரடியாகவே மிரட்டல் விடுத்தார். ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் போரில் குதித்தது ரஷ்யா. அப்போது உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபடும் என உலக நாடுகளே எதிர்பார்த்தன. ஆனால், கண்டன அறிக்கைகளை வெளியிடுவதுடன் தனது நடவடிக்கையை நிறுத்திக் கொண்டார் ஜோ பிடன். இது, உக்ரைனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனை புரிந்துகொண்ட அமெரிக்கா, உக்ரைனுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை வழங்கி வந்தது. இன்னமும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஜெலன்ஸ்கி கடும் விமர்சனம்
இதனிடையே, போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய மற்றும் நேட்டோ நாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் போது களத்தில் இறங்காமல் வேடிக்கை பார்ப்பது சரியல்ல என்ற தொனியில் ஜெலன்ஸ்கி பேசி வந்தார். இது, அமெரிக்காவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வந்தது.

ஜோ பிடன் அதிருப்தி
இதனால் ஜெலன்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இருந்தபோதிலும், வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் உக்ரைனுக்கு தொடர்ந்து பல பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை ஜோ பிடன் வழங்கி வந்தார். அப்போது கூட, ஜெலன்ஸ்கி தெனாவட்டாக பேசுவதை நிறுத்தவில்லை. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான், ஜோ பிடனை ஜெலன்ஸ்கி கடந்த ஜூன் மாதம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

தெனாவட்டாக பேசிய ஜெலன்ஸ்கி
அப்போது உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை, அதிபர் ஜெலன்ஸ்கி பட்டியல் போட்டுக் கொண்டிருந்தார். மேலும், மளிகைக் கடைக்காரிடம் பொருட்கள் பட்டியலை கொடுத்துவிட்டு சொல்வது போல, இந்த ஆயுதங்களை எல்லாம் உடனே அனுப்பி வைத்துவிடுங்கள் என ஜோ பிடனிடம் ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். மேலும், "கடந்த முறை கேட்ட ஆயுதங்கள் எல்லாம் இன்னும் வந்து சேரவில்லையே.." என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஜெலன்ஸ்கியின் பேச்சில் தெனாவட்டான தொனி தென்படுவதை உணர்ந்த ஜோ பிடன், கோபத்தில் சட்டென குரலை உயர்த்தி மிரட்டும் வகையில் பேசியதாக என்சிபி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கோபத்தில் கத்திய ஜோ பிடன்..
"எங்களால் முடிந்த உதவிகளை உடனுக்குடன் செய்து கொண்டுதான் இருக்கிறோம். கொஞ்சமாவது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்" என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் குரலை உயர்த்தி கூறியிருக்கிறார். அதுவரை ஜோ பிடன் இவ்வாறு கோபமாக பேசுவதை பார்த்திராத ஜெலன்ஸ்கிக்கு சர்வ நாடியும் அடங்கிவிட்டது. அடுத்த ஒரு மணிநேரத்திலேயே வீடியோவை வெளியிட்ட ஜெலன்ஸ்கி, "உக்ரைனுக்கு அமெரிக்கா செய்து வரும் உதவிகளை மறக்க முடியாது; இந்த தருணத்தில் அமெரிக்காவுக்கு நன்றி கூற உக்ரைன் கடமைப்பட்டிருக்கிறது" என பேசி ஜோ பிடனை 'கூல்' செய்திருக்கிரார்.