இடுப்பளவு மனிதனின்.. இமாலய சாதனை.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வைத்த.. அம்மாவின் "ஒரே வார்த்தை"
நியூயார்க்: நன்றாக கை, கால்கள் இருந்தும் என்னடா வாழ்க்கை இது என புலம்பும் மனிதர்களுக்கு மத்தியில், இடுப்பு வரைதான் மொத்த உடலே இருக்கும் இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அனைவரையும் வியப்பிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள டஸ்கராவாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜியான் கிளார்க் (25). மிக அரிய வகை முதுகெலும்பு நோயான 'கெளடல் ரிக்ரெஸன் சிண்ட்ரோம்' (caudal regression syndrome) என்ற நோயால் பிறவிலேயே பாதிக்கப்பட்ட அவர், கால்கள் இல்லாமல்தான் பிறந்திருக்கிறார். அதாவது, கால்கள் இல்லை என்றால் பலருக்கு முட்டி வரையிலாவது கால்கள் இருக்கும். ஆனால் கிளார்க்குக்கோ இடுப்புக்கு கீழே எதுவுமே கிடையாது.
கால்கள் இல்லாமல் பிறந்த இந்தக் குழந்தையை பார்த்ததுமே அவரது தாயும், தந்தையும் அழுது துடித்துள்ளனர். கை, கால்கள் நன்றாக இருந்தாலே இந்த உலகம் பல வகைகளில் ஒருவரை சிறுமைப்படுத்தும். இந்த நிலையில் கால்கள் இல்லாமல் இவன் என்ன செய்யப் போகிறான் என நினைத்து அவர்கள் நரக வேதனையை அனுபவித்தனர். அமெரிக்காவில் உள்ள பெரிய பெரிய மருத்துவர்களிடம் குழந்தையை காண்பித்தனர். அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே பதில், "இதை ஒன்றுமே செய்ய முடியாது" என்பதுதான்.
மொபட் மீது மோதிய லாரி..கால்கள் துண்டாகி மீட்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி..சென்னையில் சோகம்
வேறுபாட்டை உணர்ந்த ஜியான்
அந்த சமயத்தில், அவர்களின் உறவினர்கள் பலர் குழந்தை ஜியானை கருணைக் கொலை செய்துவிடலாம் எனக் கூறியுள்ளனர். ஆனால், அவரது பெற்றோரோ, "என்ன ஆனாலும் பரவாயில்லை.. கடவுள் எங்களுக்கு கொடுத்த இந்தக் குழந்தையை நல்லபடியாக வளர்ப்போம்" எனக் கூறிவிட்டனர். காலங்கள் உருண்டோடின. அதுவரை வீட்டில் மட்டுமே வளர்ந்த குழந்தை ஜியான் கிளார்க்குக்கு 4 வயது ஆனது. அவனை அருகில் உள்ள பள்ளியில் அவனது பெற்றோர் சேர்த்தனர். அப்போதுதான், தனது வயதை ஒத்த மற்ற குழந்தைகளுக்கும், தனக்கும் இருக்கும் வேறுபாட்டை ஜியான் கிளார்க் உணர்ந்துள்ளான்.
"உலகுக்கே நான் பாரம்"
மற்ற குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதையும், தன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவனை ஆட்டிப்படைத்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு போனான் ஜியான். அங்கு சக மாணவர்களின் கேலி கிண்டல் ஆரம்பித்தது. ஜியானின் பிறவி ஊனத்திற்கு பல பட்டப்பெயர்களை சொல்லி மாணவர்கள் கேலி செய்தனர். இதனால் பள்ளியே ஜியானுக்கு நரகமாக மாறியது. அப்போது ஒரு நாள், ஜியானுக்கு 7 வயது இருக்கும் போது, தனது தாயிடம் மனம் விட்டு ஜியான் பேசியுள்ளான். தன்னை அனைவரும் கேலி செய்வதாகவும், உலகுக்கே நான் பாரம் என்றும் என் காதுப்படவே பேசுவதாக கூறிய ஜியான், அடுத்து சொன்னதுதான் அவனது தாயின் இதயத்தை துளைத்துவிட்டது.
அம்மா சொன்ன வார்த்தை
"எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என தோன்றுகிறது. ஆனால், ஒரு இடத்தை விட்டு நகரவே என்னால் முடியவில்லையே. நான் எப்படி தற்கொலை செய்வது? எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். ஏதேனும் நீச்சல் குகளத்தில் என்னை தள்ளிவிட்டு விடுங்கள். நான் நிம்மதியாக செத்துவிடுகிறேன்" என மழலை மொழியில் அழுதபடியே கூறியிருக்கிறான் ஜியான். இதை கேட்டுவிட்டு அவன் தாயார் அழவோ, அவனை பரிதாபமாகவோ பார்க்கவில்லை. மாறாக, அவர் கூறிய அந்த வார்த்தைதான், இன்று வரை ஜியானுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது. "எந்த மனிதனும் குறைகள் இல்லாமல் பிறப்பதில்லை ஜியான். பலருக்கு அது வெளியே தெரிவதில்லை. உனக்கு அது தெரிகிறது. அவ்வளவுதான். எதை உனது குறையாக இன்று உலகம் கூறுகிறதோ, அதையே உனது வலிமையாக்கிக் கொள்.. அதே உலகம் ஒரு நாள் உன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும்" என்பதுதான் அந்த வார்த்தை.
துணிவே துணை
அந்த வார்த்தை கேட்ட மறு நொடி, ஜியானுக்கு புதிய உத்வேகம் பிறந்தது. இந்த உலகமே அவனுக்கு புதிதாக தெரிந்தது. அம்மாவின் வார்த்தை அவனுள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அடுத்த நாள், தனது சக்கர நாற்காலியை தூக்கி எறிந்தான் ஜியான். இடுப்பை வைத்தே நடந்து பழகினான். பின்னர் ஓட தொடங்கினான். எது நமக்கு வராது என தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்தான் ஜியான். ஆரம்பத்தில் அவனுக்கு கிடைத்தது என்னவோ தோல்விதான். ஆனால், இழக்க ஒன்றுமே இல்லாத மனிதனை இந்த உலகில் எது தடுக்க முடியும். முயன்று முயன்று முடியாததை எல்லாம் செய்தான். பள்ளியில் தடகள பயிற்சியில் பெயர் கொடுத்தான். மாணவர்களின் கேலி சிரிப்பு வகுப்பறையை பிளந்தது. ஆனால், ஜியான் காதுகளில் அந்த சத்தம் விழக் கூட இல்லை.
பதக்கங்கள் குவிந்தன
ஓட்டப்பந்தய பயிற்சியில் மற்ற மாணவர்கள் கால்களால் ஓட, ஜியோனா கைகளால் ஓடினான். தனக்கு உருப்படியாக இருக்கும் ஒரே அங்கமான கைகளை வலுப்படுத்த தொடங்கினான். ஒருகட்டத்தில், கால்களால் ஓடுபவர்களை விட கைகளால் வேகமாக ஓட தொடங்கிவிட்டான் ஜியான். பின்னர், கல்லூரியில் மல்யுத்தத்திலும், கலப்பு தற்காப்புப் பயிற்சியிலும் (எம்எம்ஏ) சேர்ந்தான். "எவ்வளவு உயரமான மனிதராக இருந்தாலும், ஜியானின் கைகளில் சிக்கிவிட்டால் முடிந்தது கதை" என மற்ற மல்யுத்த வீரர்களே பேசத் தொடங்கினர். பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிய ஜியானுக்கு கிடைத்த பதக்கங்களை வைக்க இப்போது அவரது வீட்டில் இடம் இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது.
கின்னஸ் புத்தகத்திலும் இடம்
இந்நிலையில்தான், எப்படியாவது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில், ஓட்டப்பந்தயத்தில் வெறியுடன் பயிற்சி பெற்றார் ஜியான். அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டு 20 மீட்டர் தூரத்தை வெறும் 4.78 நொடிகளில் கடந்து ஜியான் கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது அந்த வீடியோவைதான் கின்னஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜியான் கூறும்போது, "உணவு உண்ணவும், கழிப்பறையை பயன்படுத்தவும் கூட முடியாமல் இருந்த நான், இன்று இத்தனை சாதனைகளை செய்திருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. நல்ல கை, கால்கள் இருக்கும் மனிதர்கள், வாழ்க்கையை நினைத்து புலம்புவதை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வரும். இந்த உடலை வைத்துக் கொண்டே இவ்வளவு சாதனைகளை என்னால் செய்ய முடிகிறது.. இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை என நினைத்துக் கொள்வேன். அவர்களுக்கு ஊனம் உடலில் அல்ல.. மனதில்தான் என புரிந்துகொள்வேன். ஒருவேளை, எனது அம்மா கூறிய வார்த்தையை யாரும் இவர்களுக்கு கூறவில்லை " என்கிறார்.