கேட்டீங்களா? 1 வருடத்தில் சல்லி சல்லியான டிவிட்டர் வருவாய்.. கொத்து கொத்தாக வெளியேறும் ஊழியர்கள்
நியூயார்க்: டிவிட்டர் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஓராண்டில் சுமார் 40% வரை சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதிலிருந்து ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்த நிலையில் தற்போது அதன் வருவாயும் 40 சதவிகிதம் வரை சுருங்கியுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனம் கடந்த காலங்களில் கடுமையான சவால்களை சந்தித்து வந்திருக்கிறது. முதலில் இந்நிறுவனத்தை உலகின் முதல் நிலை பணக்காரராக இருந்த எலான் மஸ்க் வாங்குவதாக அறிவித்தார். ஆனால் இதில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதாக கூறி இந்நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்தார். இதனால் டிவிட்டரின் பங்குகள் சரிய தொடங்கின. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
இதனையடுத்து எலான் மஸ்க் டிவிட்டரை சுமார் ரூ.3.5 லட்சம் கோடி கொடுத்து வாங்கிக்கொண்டார். ஆனால் அதன் பின்னர்தான் ஆட்டமே தொடங்கியது. டிவிட்டரின் புது முதலாளியான மஸ்க் ஊழியர்களுக்கு எதாவது ஆஃபர்களை அறிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். முதல் கட்டமாக சிஇஓ பராக் அகர்வால் உட்பட பல உயர் அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினார்.

ஆட் குறைப்பு
இது இத்துடன் நின்றுவிடாமல் சுமார் 3,700 ஊழியர்கள் வரை நீக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தாங்களாகவே வேலையை விட்டு வெளியேறிவிட்டனர். இப்படி பல சலசலப்புகளுக்கு இடையே நிறுவனத்தின் வருவாய் கடுமையான சரிவை சந்தித்தது. கடந்த ஆண்டின் முதலிரண்டு காலாண்டில் டிவிட்டரின் வருவாய் பெருமளவில் சரிந்தது. கடந்த ஏப்ரல்-ஜூன் மாதத்தில் இதன் வருவாய் 270 மில்லியன் டாலராக சரிந்தது. எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கும்போது இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 54.20 அமெரிக்க டாலர் என்று இருந்தது. ஆனால் அதன் பின்னர் சுமார் 8% அளவுக்கு ஒரு பங்கின் விலையில் சரிவு ஏற்பட்டது.

ப்ளூ டிக்
எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கினால் இதன் பங்கின் விலையானது சுமார் 14 மடங்கு அதிகரிக்கும் என்ற கணிக்கப்பட்டது. எனவே கடந்த ஆண்டு முதல் டிவிட்டரின் பங்குகளை வாங்குவதில் பலர் முனைப்பு காட்டினர். ஆனால், எதிர்பார்த்ததை விட தலைக்கீழாகதான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த சரிவு தொடர்ந்த நிலையில் எலான் மஸ்க் சில அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். அதில் ஒன்றுதான் 'ப்ளூ டிக்' விவகாரம். அதிகாரப்பூர்வ கணக்கை உறுதி செய்வதற்கு ப்ளூ டிக்கை வழங்குவதாக டிவிட்டர் அறிவித்தது. ஆனால், இந்த இதற்கு 19.99 அமெரிக்க டாலர் அதாவது ரூ.1,647 கட்டணம் செலுத்த வேண்டும்.

விளம்பர தடைகள்
ஆனால் இந்த முறையிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டது. மேற்குறிப்பிட்ட அளவுக்கு பணம் கொடுத்த யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதால் போலி கணக்குகள் தங்களை அதிகாரப்பூர்வ கணக்காக காட்டிக்கொள்ள பணம் கொடுத்து ப்ளூ டிக்கை பெற்றுக்கொண்டன. எனவே எது போலி எது நிஜம் என தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. மற்றொருபுறம் அரசியல் விளம்பரங்கள் மீதான தடையையும் தளர்த்தியது. டிவிட்டரில் அரசியல் விளம்பரங்கள் என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம் எனவே அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கிறோம் என 2019ல் டிவிட்டர் அறிவித்திருந்தது.

அரசியல்
ஆனால் டிவிட்டரில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய எலான் மஸ்க் இந்த தடையை தளர்த்தினார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த விளம்பரங்கள் பொது உரையாடலை எளிதாக்கும். மட்டுமல்லாது இது டிவி மற்றும் பிற ஊடகங்களின் கொள்கையுடன் பொருந்தும்" என்று கூறியிருந்தார். ஆனால் இவ்வளவும் செய்தும் கூட வருவாய் எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை. எனவே அடுத்ததாக பெயர்களை விற்க திட்டமிட்டது. அதாவது @ என்கிற எழுத்துருவுக்கு அடுத்து வரும் பெயர்களை பயனாளர்கள் தங்கள் விருப்பம் போல நிர்ணயம் செய்துகொள்ளலாம். ஆனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும். இது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. ஆக இப்படியாக தொடர்ந்து பல முயற்சிகளை டிவிட்டர் மேற்கொண்டிருந்தாலும் கடந்த ஓராண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் சுமார் 40% குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications