சமரசமா.. பேச்சுக்கே இடமில்லை.. தீவிரவாதத்தை வேரோடு அழிப்போம்.. ஐ.நாவில் இந்தியா சுளீர் பேச்சு
நியூயார்க்: சமரசம் இல்லா அணுகுமுறையை கடைப்பிடித்தால் மட்டுமே தீவிரவாதத்தை வேரோடு அழிக்க முடியும் என்று இந்தியாவுக்கான ஐ.நா. நிரந்தரத் தூதர் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார்.
எந்த ரூபத்தில் தீவிரவாதம் வந்தாலும் அதை ஒழித்துக் கட்ட உலக நாடுகள் உறுதியேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சமீபகாலமாக ருச்சிரா கம்போஜின் கருத்துகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், அவரது இந்த பேச்சுக்கும் மற்ற நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி.. உருவாகும் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு.. ஸ்டாலின் அதிரடி
"யாரும் பாடம் எடுக்க வேண்டாம்"
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கு இந்தியா தற்போது தலைமை வகித்து வருகிறது. கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக ஐ.நா. நிரந்தரத் தூதர் ருச்சிரா கம்போஜ் தலைமை பதவியை ஏற்றார். அப்போது பிற நாடுகளின் செய்தியாளர்கள் அவரிடம், "ஜனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியாவில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறதே.." என கேள்வியெழுப்பபட்டது. அதற்கு, "பழம்பெரும் நாகரீக வளர்ச்சியை கொண்டுள்ள இந்தியாவுக்கு, ஜனநாயகம் குறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை" என ருச்சிரா கம்போஜ் பதிலளித்தார். அவரது இந்த காட்டமான பதில், உலக நாடுகளை உற்று கவனிக்க செய்தன.
உலகுக்கே ஆபத்து
இந்நிலையில், ஈராக்கில் ஐஎஸ்ஐஎல் (ISIL) தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடர்பான ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. அப்போது கூட்டத்துக்கு தலைமை வகித்து ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: தீவிரவாதம் என்பது சில நாடுகள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை என பெரும்பாலான நாடுகள் நினைத்து வருகின்றன. உண்மையை சொல்லப்போனால், தீவிரவாதம் இந்த உலகத்துக்கே பெரிய அச்சுறுத்தலையும், ஆபத்தையும் விளைவித்துக் கொண்டிருக்கிறது.
நல்ல தீவிரவாதம் - கெட்ட தீவிரவாதம்
தீவிரவாதத்துக்கு நாடு, மொழி, பிராந்தியம் என நாம் வகைப்படுத்தி பார்க்கக்கூடாது. எந்த நாட்டில் தீவிரவாதம் உருவானாலும் அதை அழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். எங்கோ உருவான தீவிரவாத கும்பலால், பல வல்லரசு நாடுகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல, எந்த தீவிரவாதத்தையும் நல்லது, கெட்டது எனவும் நாம் பார்க்கக் கூடாது. நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்பது கிடையாது.
சமரசம் இல்லா அணுகுமுறை
தீவிரவாதம் எப்போதும் கைப்பிடி இல்லாத கத்தியை போன்றது. அதை யார் கையில் எடுத்தாலும், அது அவர்களுக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே, தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் சகித்துக்கொள்ளக் கூடாது. உலகையே இன்று அச்சுறுத்தி வரும் தீவிரவாத்தை நாம் வேரோடு அழிக்க வேண்டுமென்றால், சமரசம் இல்லாத அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல, தீவிரவாதத்தை ஆதரிக்கும் அல்லது அதற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளையும் நாம் தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாத தாக்குதல்களுக்கு அந்த நாடுகளை பொறுப்பாக்க வேண்டும். இவ்வாறு ருச்சிரா கம்போஜ் கூறினார்.