கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. சசிகலாவிடம் கேட்கப்பட்ட 280 கேள்விகள்.. 30 மணி நேரம் விசாரணை!
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 316 பேரிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றம் மற்றும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் கனகராஜ் காா் விபத்தில் உயிரிழந்தாா். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

கொடநாடு வழக்கு
இந்த வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, மருது அழகுராஜ் உள்ளிட்ட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தினர்.

சிபிசிஐடி விசாரணை
தொடர்ந்து, பல்வேறு சாட்சிகளிடம் கோவையில் உள்ள பிஆர்எஸ் அலுவலகத்தில் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனால், தனிப்படை போலீசார் இதுவரை சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை உதகை மாவட்ட நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தனர்.

316 பேரிடம் விசாரணை
தொடர்ந்து விசாரணை நடத்த ஏதுவாக இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் சிபிசிஐடி போலீசார், நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து பெற்றனர். இதனிடையே ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், 316 பேரிடம் விசாரணை நடத்தினர்.

நீதிமன்றம் ஒப்படைப்பு
இந்நிலையில் 316 பேரிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய 3600 பக்க விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதகை நீதிமன்றத்தில் 3,600 பக்க விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்தது. இதன் மூலம் சசிகலாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்கள் வெளி வந்துள்ளன.

சசிகலாவிடம் 280 கேள்விகள்
அதில் கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. விசாரணையின் போது சசிகலாவிடம் 280 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த கேள்விகளுக்கு சசிகலா அளித்த பதில்கள் 30 பக்கங்களாக தாக்கல் அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications