வாகன ஓட்டுநர்களே இன்சூரன்ஸ் கிளைம் செய்யவே முடியாது.. ஊட்டி லாரி ஓட்டுநர் செய்த இந்த தவறை பாருங்க
ஊட்டி: விபத்து காப்பீடு விவகாரத்தில் பலரும் இன்னல்களை சந்தித்து வருவதாக அண்மைக்காலங்களில் சமூக வலைதளங்களில்அதிகமான பதிவுகளை காண முடிகிறது. பலரும் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்த சூழலில் விபத்து ஏற்பட்டது சம்பந்தமாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதால் காப்பீடு பணம் பெற முடியவில்லை என லாரி டிரைவர் ஒருவர் நீலகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மனு அளித்துள்ளார்.
மோட்டார் வாகன சட்டப்படி முழு அல்லது மூன்றாம் நபர் காப்பீடு அவசியம் ஆகும். அத்துடன் தனி நபர் விபத்து காப்பீடும் அவசியம் ஆகும். விபத்து ஏற்பட்டால், உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டதை கூறி அட்மிட் ஆக வேண்டும். இந்த தகவலை மருத்துவர்களிடம் கூறி, காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்த வைக்க வேண்டும். அப்படி தெரியப்படுத்த வைக்காமல், சிகிச்சை முடிந்துசென்றுவிட்டால், விபத்து காப்பீடு பெறுவது கடினமாகிவிடும்.

எனவே விபத்து ஏற்பட்ட உடன், உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம். ஆனால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் நேரில் வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்வார்கள்.
போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பின்னர், அந்த விபத்து எப்படி நடந்தது, விபத்திற்கு என்ன காரணம் என்பதையும் குறிப்பிடுவார்கள். அதன்பிறகு அந்த விபத்து குறித்து எப்ஐஆர் பதிவினை வைத்து தான் சிகிச்சை முடிந்த பின்னர் விபத்து காப்பீடு பெற விண்ணப்பிக்க முடியும். நீலகிரி மாவட்டத்தில் ஒருவர் விபத்தில் சிக்கிய தகவலை தெரிவிக்காத காரணத்தால் காப்பீடு பெற முடியாமல் பரிதவித்து போயிருக்கிறார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நேற்றுநடந்தது. அந்த நிகழ்வுக்கு ஊட்டியை சேர்ந்த ஜோசப் தனது குடும்பத்தினருடன் ஆம்புலன்சில் வந்து கலெக்டர் லட்சுமி பவ்யாவிடம் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "நான் ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகே வி.சி. காலனி பகுதியை சேர்ந்தவன், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தேன். கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதி கிரேன் மூலம் லாரியில் பழைய பொருட்கள் ஏற்றிக்கொண்டிருந்தோம்.

அப்போது பழைய லாரியின் பாகங்களை ஏற்றும் போது கிரேன் கொக்கி கழன்று லாரி பாகங்கள் என் மீது விழுந்து விட்டது. இதில் எனது இரு கால்களும் உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். ஆனால் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் விட்டு விட்டார்கள்.
இந்த சூழலில் நான் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், என்னுடைய இரு கால்களும் செயல் இழந்து போனதால் நானும் எனது குடும்பமும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கழித்து என் மனைவி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். ஆனால் தாமதமாகி விட்டது என்று கூறி வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டார்கள். இதனால் என்னால் காப்பீடு வாங்க முடியவில்லை. மேலும் இதுதொடர்பாக நானும், என்னுடைய குடும்பத்தினரும் தினமும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications