கோடநாடு கொலை வழக்கில் இறுகும் பிடி..ஆறுகுட்டியிடம் 3வது முறையாக விசாரணை - சூத்திரதாரி சிக்குவாரா?
கோடநாடு விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை காவல்துறையினர் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். மணல் விற்பனையாளர் மகனிடம் 3 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் மாஜி எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் 3வது முறையாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொள்ளை முயற்சி, காவலாளி கொலை தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொள்ளப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஸ்டாலின் ஆக்சன்.. விஜிலன்ஸ் ரெய்டு! கோடநாடு கேஸ்! குறிவைக்கப்பட்ட
மர்ம மரணங்கள்
இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் இறந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடநாடு பங்களாவில் மரவேலைகள் செய்த அதிமுக பிரமுகர் சஜீவனிடம் விசாரணை நடைபெற்றது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் எனப் பேசிவருகின்றனர்.
மாஜி எம்எல்ஏ ஆறுகுட்டி
கோவை மேற்கு மண்டல ஐஜிஆர்.சுதாகரின் நேரடி மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கெனவே 2 முறை போலீஸார் விசாரித்திருந்தனர். இந்நிலையில், கோவைபோலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக நேற்று விசாரணை நடத்தினர்.
இறுகும் பிடி
சசிகலா, விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே தனிப்படையினர் விசாரணை நடத்தியிருந்தனர். முந்தைய திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் மணல் ஒப்பந்தம் எடுத்து சம்பாதித்தவர் ஆறுமுகசாமி. இவரது மகன் செந்தில்குமார் பெயரில் 'செந்தில் குழுமம்' என்ற பெயரில் கட்டுமான நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கோடநாடு பங்களாவில் இவர் கட்டுமான வேலைகளைச் செய்துள்ளார். இதனையடுத்து மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில் குமாரிடம் கடந்த வாரம் 3 நாட்கள் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கூடுதல் விசாரணை
கோடநாடு வழக்கில் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 250 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.
ரகசிய வாக்குமூலம்
இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறுகும் பிடி
முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது உதவியாளர் நாரயணசாமி, மகன் அசோக்குமார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர்கள் சிபி, சுனில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிய கண்ணன் ஆகியோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் 3வது முறையாக ஆறுகுட்டியிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கார் டிரைவர் மரண வழக்கு
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதன்மையான நபரான கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த இவர்,ஆறுக்குட்டியிடமும் ஓட்டுநராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் அடிப்படையில் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். மாலையில் விசாரணை முடிந்ததும் ஆறுக்குட்டி புறப்பட்டுச் சென்றார்.
அண்ணன் கைது
கார் டிரைவர் கனகராஜ் மரணம் விபத்து அல்ல என அவரது மூத்த அண்ணன் தனபால் தெரிவித்து வந்தார். ஆனால் விபத்துதான் என சேலம் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறினர். கோடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி காவல் துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்து தற்போது ஊட்டியிலேயே தங்கியிருந்தனர்.
சிக்குவாரா சூத்திரதாரி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் தற்போது கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன. இந்த குற்றத்தின் மூலம் உண்மையாகவே ஆதாயம் அடைந்தவர்களை கண்டுபிடித்து கைது செய்வதே காவல்துறையின் முக்கிய கடமை என்பதே அதிமுக தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது.