"இனி குட்டி போடாது".. வளர்ப்பு நாய் மீது கோபம்.. அப்படியே சிறுத்தைக்கு உணவாக போட்ட ஓனர்.. கொடுமை
நீலகிரி: இனி தனது வளர்ப்பு நாய்களால் குட்டிகளை ஈன முடியாது என்ற ஒரே காரணத்துக்காக, அவற்றை சிறுத்தைக்கு உணவாக வனப்பகுதியில் கட்டிச் சென்ற கொடூர மனம் படைத்த உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒரு வாரமாக உணவு ஏதும் இல்லாமல், உடல் நலிவுற்று கிடந்த அந்த நாய்களை பொதுமக்கள் மீட்டு விலங்குகள் நலக் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
ஈவு இரக்கமில்லாத இந்த செயலில் ஈடுபட்ட அந்த நாய்களின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
வெண்ணெய் திரண்டு வரும் போது.. பானையை உடைத்த எடப்பாடி.. பாஜகவின் திட்டத்தில் விழுந்த ஓட்டை? என்னாச்சு
'கிரேட்' டேன் நாய்கள்
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் உதயக்குமார். இவர் தனது வீட்டில் பல வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகிறார். அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 பெண் 'கிரேட் டேன்' (Great Dane) ரக நாய்களை அவர் வாங்கினார். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இந்த நாய்கள் 4 அடி உயரம் வரை வளரக்கூடிய திடகாத்திரமான நாய்கள் ஆகும். மான் மற்றும் காட்டுப் பன்றிகளின் வேட்டைக்கு இந்த நாய்கள் ஜெர்மனியில் பயன்படுத்தப்படுகின்றன.
"இனி குட்டி ஈன முடியாது"
இந்த 2 பெண் நாய்களும் 10-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றிருக்கிறது. வெளிநாட்டு ரக நாய் என்பதால் கிட்டத்தட்ட கிரேட் டேன் ரக நாய்க்குட்டி ஒன்றே தலா ரூ.50 ஆயிரத்துக்கு மேல் விலை போகும். இதனால் அந்தக் குட்டிகளை விற்று உதயகுமார் நல்ல லாபம் அடைந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக அந்த நாய்கள் குட்டிகளை ஈனவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கால்நடை மருத்துவர்களிடம் காட்டிய போது, அந்த நாய்கள் குட்டியை ஈனும் வயதை கடந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சிறுத்தைக்கு இரையாக்க..
இதனால் ஏமாற்றம் அடைந்த உதயகுமார், இந்த நாய்களால் இனி பயனில்லை என நினைத்துள்ளார். இதனிடையே, கடந்த சில வாரங்களாக ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் பகுதி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது 2 வளர்ப்பு நாய்களை இரவோடு இரவாக அங்குள்ள வனப்பகுதியில் கட்டிப்போட்டு வந்திருக்கிறார் உதயகுமார். சிறுத்தைக்கு இரையாக்கும் எண்ணத்தில் இந்தக் கொடூர செயலை அவர் செய்திருக்கிறார்.
நாய்கள் மீட்பு.. வழக்கு பதிவு
இந்நிலையில், ஒரு வாரமாக தொடர்ந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் நேற்று அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த இந்த நாய்களை அவர் மீட்டனர். ஒரு வாரமாக உணவு ஏதும் இல்லாததால் அந்த நாய்கள் மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் இருந்துள்ளன. இதையடுத்து, விலங்குகள் நல ஆர்வலர்கள் அங்கு வந்து அந்த 2 நாய்களையும் பிக்கட்டியில் உள்ள சர்வதேச வளர்ப்பு பிராணிகளுக்கான மையத்தில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உதயகுமார் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது கோவையில் இருக்கும் உதயகுமார் ஊட்டிக்கு வந்ததும் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.