அதிமுக மாஜி அமைச்சர் புத்திசந்திரன் மீது விவசாயி பரபர புகார்.. இரவோடு இரவாக வேலையை காட்டிட்டாரு!
நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், தனக்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்கு அருகே உள்ள வேறொருவரின் தோட்டத்தில் இருந்த 300 தேயிலைச் செடிகளை இரவோடு இரவாக அகற்றியதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி, வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சில காலம் அமைச்சராகப் பணியாற்றியவருமான புத்திசந்திரன், மஞ்சூர் பகுதியில் தேயிலை தோட்டங்களை சொந்தமாக வைத்துள்ளார்.
அவரது தோட்டத்துக்கு அருகில் விவசாயம் செய்யும் ஒருவரிடம் இடத்தை விற்கச் சொல்லி பிரச்சனை செய்து வந்ததாகவும், அதற்கு மறுத்ததால், இரவோடு இரவாக தேயிலைச் செடிகளை சேதப்படுத்தி உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

நீலகிரி தேயிலை தோட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மணிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (71). நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மணிக்கல் மட்டம் பகுதியில் ராஜூவுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் அவர் தேயிலை விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது தேயிலை தோட்டத்தை ஒட்டி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனின் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது.

மாஜி அமைச்சர் புத்திசந்திரன்
முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், தேயிலை தொழிற்சாலை கட்டப்போவதாக, ராஜூவிடம் இடத்தை விற்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜூ மறுத்ததால், முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இடத்தில் தொழிற்சாலை அமைப்பதற்காக தேயிலை தோட்டத்தில் உள்ள செடிகளை பொக்லைன் மூலம் அகற்றியுள்ளார் புத்திசந்திரன்.

பக்கத்து தோட்டத்தில் சேதம்
அப்போது புத்திசந்திரனின் தோட்டத்தை ஒட்டியுள்ள ராஜூவின் தோட்டத்தில் இருந்த சுமார் 300 தேயிலைச் செடிகளையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜூ மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே, அனுமதி பெறாமல் மினி ஜேசிபி பயன்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவர் தினேஷ்குமார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

அனுமதி இன்றி
இதைத்தொடர்ந்து வி.ஏ.ஓ தினேஷ்குமார் மஞ்சூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தேயிலை செடிகளை அகற்ற அனுமதி பெற்று பயன்படுத்தி வந்த நிலையில் வேறு சர்வே எண்களை கொண்ட நிலத்தில் மினி ஜேசிபி பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட மினி ஜேசிபியின் உரிமையாளர் மணிகண்டன் என்பவரிடம் இருந்து சாவி பெறப்பட்டது. குப்பட்டா இயந்திரம் இரவு நேரத்தில் பயன்படுத்தியது மற்றும் அனுமதி வழங்கப்பட்ட இடம் தவிர வேறு இடத்தில் இயந்திரத்தை பயன்படுத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சொன்னது
ஆனால், இச்சம்பவம் குறித்துப் பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், எனது தேயிலை தோட்டத்தை ஒட்டியுள்ள தோட்டத்தை எனக்கு ஒருவர் விற்பனை செய்துள்ளார். அந்த இடத்தை அவரது உறவினர் தனக்கு சொந்தமானது என கூறி பிரச்சனை செய்து வருகிறார். நான் எனக்கு தோட்டத்தை விற்றவரிடம், பிரச்சனை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கூறிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications