புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்
முதுமலை வனப்பகுதியில் புலியின் நடமாட்டம் தென்பட்டுள்ளது
நீலகிரி: 8 நாட்களுக்கு பிறகு வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகி இருக்கிறது.. மேலும், தேடப்பட்டு வரும் T23 புலி, கூடலூர் நோக்கி வந்த நிலையில், போஸ்பெரா பகுதி மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது...
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 4 பேரையும், மற்றும் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்..
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!
இதற்காக 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், 2 கும்கி யானைகள், 3 பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் வைத்து, புலியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்..
கண்காணிப்பு
இதைதவிர, 50-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், 20-க்கும் மேற்பட்ட அதிரடி படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்... அதேபோல புதர்களில் புலி பதுங்கிவிட்டால், விலங்குகளின் வெப்பநிலை மூலம் அவற்றை கண்டறியும் நவீன கேமராவும் தேடுதல் வேட்டையில் இறக்கிவிடப்பட்டுள்ளது...
புலியின் நடமாட்டம்
அதன்படி, கடந்த 17 நாட்களாகவே புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
சிங்கார வனப்பகுதியில், கடந்த 5 நாட்களாக புலியின் கால் தடங்கள் தெரியாமல் போனதால், வனத்துறையினர் திணறிவிட்டனர்.. புலியை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் ஏமாற்றமும் அடைந்தனர்.. மேலும், உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி ஒருவேளை இறந்திருக்கலாம் என்று வனப்பகுதியை ஒட்டியுள்ள நீர்நிலைப் பகுதிகளிலும் வனத்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
முதுமலை
அதற்காக, நேற்று முதல் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பொக்காபுரம் மற்றும் மாயார் வனபகுதிகளில் 4 குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்... ஆனால், 65 இடங்களில் தானியங்கி சென்சார் கேமராக்களில் புலி பதிவாகவில்லை.. இந்நிலையில் T23 புலியானது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட போஸ்பாரா பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி இருந்த அந்த புலி தெப்பகாடு, முதுமலை வழியாக போஸ்பாரா வன பகுதிக்கு சென்றுள்ளது.
கேமரா
போஸ்பாரா பகுதியில் வைக்கபட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் T23 புலி பதிவாகி இருந்தது.. வனத்துறையினர் உடனடியாக அந்த புலியை தேடினர்.. ஆனால் இப்போது அந்த புலி மறுபடியும் தேவர்சோல, மேபீல்டு பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.. அதனால் அதனை பிடிக்க வனத்துறையினர் விரைந்துள்ளனர்.. இதனையடுத்து ஸ்ரீமதுரை ஊராட்சியின் மூலம் போஸ்பெரா பகுதி மக்களுக்கு புலி நடமாட்டம் குறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
மேலும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறது.. அதேபோல, முதுமலை வனப் பகுதிக்கு உட்பட்ட முதுகுளி, நாகம்பள்ளி கிராம மக்களும் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இன்று மாலைக்குள் எப்படியும் புலியை பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.