நீலகிரியில் எல்.முருகன் முகாம்! 2024-ல் ஆ.ராசாவை எதிர்த்து களமிறங்க முடிவு? சபாஷ் சரியான போட்டி!
நீலகிரி: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் களமிறக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே முழுமையாக உள்ளதால் நீலகிரியில் இப்போதே அடித்தளப் பணிகளை ஆரம்பித்துவிட்டார் எல்.முருகன்.
இதனிடையே கடந்த 2 நாட்களாக நீலகிரியில் முகாமிட்டுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றிருக்கிறார்.
2024 பொதுத்தேர்தல்
வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை களம் இறக்கும் திட்டத்தில் இருக்கிறது பாஜக தேசியத் தலைமை. இது தொடர்பான அறிவுறுத்தலை கட்சி மேலிடம் எல்.முருகனுக்கு வழங்கியிருப்பதாகவும் இதன் காரணமாக தான் அவர் நீலகிரிக்கு அடிக்கடி விசிட் அடிக்கத் தொடங்கியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இப்போது கூட கடந்த 2 நாட்களாக நீலகிரியில் முகாமிட்டிருந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.
கோரிக்கை மனுக்கள்
இதுமட்டுமல்லாமல் நீலகிரி தொகுதி மக்களின் நீண்டகால பிரச்சனைகள், கோரிக்கைகள், குறைகள் பற்றியும் முழுமையாக விவரம் சேகரிக்க ஆரம்பித்துள்ளார் எல்.முருகன். இதை வைத்து பார்க்கும் போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசாவை எதிர்த்து எல்.முருகன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் பல்வேறு வழிகளில் மத்திய அரசுக்கு ஆ.ராசா குடைச்சல் கொடுத்து வரும் சூழலில், அவரை தேர்தலில் வீழ்த்துவதற்கான வியூகத்தை அமைத்து வருகிறது பாஜக தலைமை.
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் நீலகிரி தொகுதியை பாஜக கேட்டுப் பெறும் எனத் தெரிகிறது. இதனிடையே எல்.முருகன் வந்தாலும் சரி வேறு யார் வந்தாலும் சரி மோதி பார்த்துவிடலாம் என்ற தெம்புடன் வலம் வருகிறார் ஆ.ராசா. திமுக பொதுக்குழு முடிந்த பிறகு தொகுதி முழுவதும் விரைவில் ஒரு டூர் அடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஆ.ராசா. இதனிடையே சபாஷ் சரியான போட்டி என்கிற வகையில் குளு குளு மாவட்டமான நீலகிரியில் அனல் பறக்கும் அரசியல் நகர்வுகள் இருக்கிறது.
நெருங்கும் தேர்தல்
வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் எல்லாம் போக தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால் தமிழகத்தில் 5 தொகுதிகளை குறி வைத்து பாஜக மிகத் தீவிரமாக களப்பணியை தொடங்கியுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.