இலாகா மாறியது ஏன்? நான் தான் முதல்வரிடம் மாற்றித் தர சொன்னேன்.. அமைச்சர் ராமச்சந்திரன் சொன்ன விஷயம்!
நீலகிரி : உடல்நிலை சரியில்லாததால் இலாகாவை மாற்றித் தருமாறு முதலமைச்சரிடம் கேட்டதால் தனக்கு சுற்றுலாத்துறையை ஒதுக்கியதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சிலரின் துறைகள் மாற்றப்பட்டன. சிலரிடமிருந்த இலாகாக்கள் பறிக்கப்பட்டு, வேறு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அந்தவகையில், வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுற்றுலாத்துறைக்கு பொறுப்பு வகித்த மதிவேந்தன், வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தான் கேட்டுக் கொண்டதாலேயே துறை மாற்றப்பட்டதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராமச்சந்திரன்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகையில் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் தொழிலாக சுற்றுலாத் துறை உள்ளது. குறிப்பாக நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிடும் வகையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது என்றார்.

சுற்றுலாத்துறை
மேலும் நீலகிரி மாவட்டம் தேயிலை வா்த்தகம் மற்றும் சுற்றுலாவையே பெருமளவில் நம்பி உள்ளது. இதனால் சுற்றுலாவை நம்பி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் வருவாயை ஈட்டும் வகையில் சுற்றுலா தொழில் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் துறையை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், நீலகிரி மாவட்டம் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இந்த துறை பணிகளை சிறப்பாக மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

நான்தான் கேட்டேன்
அதைத்தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள், வனத்துறைக்கு பொறுப்பு வகித்த நிலையில், சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு, பதிலளித்த அவர் உடல்நல பாதிப்பு காரணமாக என்னிடம் உள்ள வனத்துறையை மாற்றி விட்டு சுற்றுலாத் துறையை வழங்கும்படி நான் தான் முதலமைச்சரிடம் கேட்டேன். அதன் காரணமாகவே சுற்றுலாத்துறை எனக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

வனத்துறை அமைச்சர்
தமிழ்நாட்டில், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது, குன்னுார் தொகுதியில் வெற்றி பெற்ற ராமச்சந்திரன், கதர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமச்சந்திரனுக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது.

சுற்றுலா இலாகா
அதிக வனப்பரப்பை கொண்ட நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரனுக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டதால், மேற்குத் தொடர்ச்ச்சி மலையின் வனங்களுக்கு பாதுகாப்பு, காடுகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவரது பதவி மாற்றப்பட்டு, அவருக்கு மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மதிவேந்தன்
சுற்றுலாத்துறை அமைச்சரான மதிவேந்தனின் செயல்பாடுகளில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருப்தி இல்லை எனக் கூறப்பட்டது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் அவர் சிறப்பாகச் செயல்படவில்லை என முதல்வருக்கு சென்ற ரிப்போர்ட் காரணமாக அவர் அமைச்சரவையில் இருந்தே தூக்கி அடிக்கப்படலாம் என்று இருந்த நிலையில் தான், அவரது துறை ராமச்சந்திரனுக்கு மாற்றப்பட்டு, ராமச்சந்திரன் பொறுப்பு வகித்த வனத்துறை மதிவேந்தனுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தான் கேட்டுக்கொண்டதாலேயே துறை மாற்றப்பட்டதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications