ஆ.. வாயை பிளந்த மக்கள்! பூதம் போல வந்த பெரும் தூசு, புகை! நொய்டா கட்டிடம் வெடித்த போது என்ன நடந்தது?
நொய்டா: நொய்டாவில் இருக்கும் இரட்டை கோபுர கட்டிடம் இன்று தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மிகப்பெரிய அளவிற்கு புகை பரவியது.
நொய்டாவில் சுரெபிடெக் எமெரெல்ட் நிறுவனம் மூலம் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும் இது. 40 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் இந்தியாவில் உள்ளே உயரமான குடியிருப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மொத்தம் 900 பிளாட்டுகள் கொண்ட இந்த கட்டிடம் 7.5 லட்சம் சதுர அடி பரப்பிற்கு பறந்து விரிந்து காணப்பட்டது.
நொய்டா அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பை காண குவிந்த மக்கள்... உறவினர்களுக்கு பறக்கும் வீடியோ கால்கள்
நொய்டா
நொய்டாவில் வேகமாக வளரும் நொய்டா - நொய்டா கிரேட்டர் எக்ஸ்பிரஸ்வே பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் சாலையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. விதிகளை மீறி இந்த கட்டிடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. நொய்டாவில் செக்டர் 93ஏ பகுதியில் இந்த கட்டிடத்தை கட்ட 2004ல் அனுமதி அளிக்கப்பட்டது. முதலில் 14 டவர்கள், 9 மாடிகள் மட்டுமே இருக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் கட்டிடம் பாதி எழுப்பப்பட்ட பின் இந்த திட்டம் மாற்றப்பட்டது. 2012ல் இதில் கூடுதல் மாடிகள் கட்ட முறையின்றி முடிவு எடுக்கப்பட்டது.
விதி மீறல்
அதன்படி இதை 40 மாடிகளாக கட்டலாம், இரண்டு டவர்கள் கட்டலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இது சட்டப்படி விதி மீறி. இதனால் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு சங்கத்தினர் வழக்கு தொடுத்தனர். 2014ல் இந்த கட்டிடத்தை இடிக்க அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது . அதோடு வீட்டிற்காக மக்களிடம் வாங்கிய பணத்தை 14 சதவிகித வட்டியோடு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இதன்பின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.
என்ன நடந்தது
இந்த உச்ச நீதிமன்ற வழக்கிலும் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பல விதிகள் இதில் மீறப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டது. இரண்டு டவர்களுக்கு இடையில் உள்ள தூரம், மாடிக்கு இடையில் உள்ள தூரம் என்று பல விதிகளில் மீறல் நடந்துள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இந்த இரட்டை கோபுர கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. 2.30 மணிக்கு இடிக்கப்பட்ட கட்டிடம் வெறும் 9 வினாடியில் இடிந்து விழுந்தது.
வெடிப்பு
இதற்காக 3700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன. வயர்கள் மூலம் எல்லா மாடிகளிலும் வெடிகள் வைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு மூலம் இந்த தகர்ப்பு செய்யப்பட்டது. இந்த கட்டிடம் வெடித்த போது அருகில் இருந்த கட்டிடங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய அளவில் புகை சென்றது. படங்களில் காட்டுவது போல மிகப்பெரிய புகை அருகில் இருந்த குடியிருப்புகளுக்கு சென்றது. அந்த பகுதியில் இந்த கட்டிடம் வெடிக்கவைக்கப்படுவதை பார்க்க பல ஆயிரம் பேர் குவிந்தனர்.
ஆச்சர்யம்
அதேபோல் மீடியாக்களும் அதிக எண்ணிக்கையில் இந்த சம்பவத்தை காண குவிந்தன. இந்த கட்டிடம் வெடிக்கவைக்கப்பட்ட போது அருகில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு புகை, தூசிகள் பரவியது. அருகில் இருந்த கட்டிடங்கள் எல்லாம் அந்த புகையில் அப்படியே காணாமல் போனது. பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வகையிலும், ஆச்சர்யம் அளிக்கும் வகையிலும் இந்த சம்பவம் நடைபெற்றது. இதனால் ஏற்பட்ட தூசிகள் அடங்க இன்னும் 2- 3 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.