ஜெயலலிதா மரண வழக்கு: ஆறுமுகசாமி ஆணையை மாற்ற முடியாது- அப்போலோ கோரிக்கை : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுப்படுத்த முடியாது, ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்ற அப்பல்லோ நிர்வாகம் வைத்த கோரிக்கையை ஏற்க முடியாது. அது தற்போதையை ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு பாதிப்பதாக இருக்கும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரிய அப்பல்லோவின் மனு நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அமர்வில் இன்று இரண்டாம் நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுக சாமி தரப்புக்கும், அப்போலோ தரப்புக்கும் கடும் வாதம் ஏற்பட்டது. விசாரணை விவரம் வருமாறு:
அப்போலோ- ஆறுமுக சாமி ஆணைய தரப்பு மோதல்
வழக்கி அப்பல்லோ நிர்வாகம் தரப்பு வைத்த வாதத்தில், "சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தாக்கல் செய்து உள்ளது. இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது" என தெரிவித்தனர்.
ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில், நாங்கள் இன்னும் வாதங்களை முழுதாக வைக்காத நிலையில், அப்பல்லோ குறுகிடுவதை அனுமதிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆறுமுக சாமி ஆணைய வாதத்துக்கு மட்டுமே அனுமதி
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணையம் தனது வாதங்களை நிறைவு செய்த பின்னர், அதற்கான பதில்களை அப்பல்லோ தரப்பு எடுத்துவைக்கலாம், எனவே தற்போது குறுக்கிட வேண்டாம் என உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் வைத்த வாதத்தில், "ஆணைய விசாரணையின்போது வெளியாட்கள் யாரும் போது அனுமதிக்கப்படுவதில்லை. சாட்சியங்களுக்கான ஒரு இருக்கை, ஒரே ஒரு வழக்கறிஞரும் அனுமதிக்கப்படுகிறார்கள், எனவே வெளியாட்களுக்கு வேண்டுமென்றே தகவல்கள் கசியவிடப்படுகிறது. வீடியோ பதிவு செய்து கசிய விடுப்படுகிறது போன்ற அப்பல்லோ நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகள் பொய்யானது.
மேலும், அரசுக்கும் இந்த ஆணையத்திற்கு சம்பந்தம் இல்லை. அரசு தரப்பு சாட்சியங்கள் தான் விசாரிக்கப்படுகிறார்களே தவிர, அரசு இந்த ஆணையத்தின் விசாரணையில் மனுதாரரோ அல்லது எதிர்மனுதாரரோ கிடையாது" எனத்தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆணையத்திற்கு என்று எதற்காக தனியாக வழக்கறிஞர்? அவர் ஏன் ஆணையத்திடம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்கிறார் எனக்கேள்வி எழுப்பினர்.
மருத்துவ நிபுணர்களை அனுமதிக்கலாம்- ஆணையம்
அதற்கு பதிலளித்த ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞர், "சாட்சியங்களின் தகவல்கள் முரண்பாடாக இருக்கும் பட்சத்தில் அதனை தான் பிரமாண பத்திரங்களாக தாக்கல் செய்கிறார். எடுத்துக்காட்டாக அப்போதைய சுகாதார செயலாளர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதற்கும், ஆணையத்தில் சாட்சியமாக கூறியதற்கும் வித்தியாசம் இருந்தது.
இதை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார் இது தான் வழக்கறிஞரின் பணி. மேலும் ஆணையத்தின் உதவிக்காக மருத்துவ நிபுணர் குழு வேண்டுமெனில் அமைக்கலாம். ஆனால், ஆணையத்தின் தலைவர்களாக நீதிபதிகளை நியமிக்கும் போது அவர்கள் மருத்துவ ஆதரங்கள், ஆவணங்களை நீதித்துறை சார்ந்து ஆராய திறமையானவர்கள் கிடையாது என்பதை இந்த நீதிமன்றம் சொல்லிவிட்டு தாராளமாக ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்துங்கள்" எனத் தெரிவித்தார்.
அப்போலோ கோரிக்கையை ஏற்க முடியாது- உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள், " ஜெயலலிதா மரணம் தொடர்பான சிகிச்சை விவரங்களை, மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவ குழு அமைப்பது தொடர்பாகவும், சாட்சியங்களை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்மதமா என்பதை அப்பல்லோ தெரிவிக்க வேண்டும்.
அதேவேளையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்ற அப்பல்லோ நிர்வாகம் வைத்த கோரிக்கையை ஏற்க முடியாது. தற்போதைய நிலையில் ஆணையத்தில் வேறு நீதிபதிகளை நியமனம் செய்தால் அது தற்போதையை ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு பாதிப்பதாக இருக்கும். ஆணையத்திற்கு உதவுவதற்காக மருத்துவ குழுவை வேண்டுமானால் நாங்கள் அமைத்து தருகிறோம்". எனத் தெரிவித்தனர்.
ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில், " மறைந்த அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான காரணங்களை தமிழக மக்கள் அறிய வேண்டும் என்ற மனநிலையில் இருக்கின்றனர், எனவே அதை மனதில் வைத்து தான் ஊடக செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர், அந்த வகையில் 1 செய்தியாளர் அனுமதிக்கப்பட்டார். மேலும் ஆணைய விசாரணை தொடர்பான செய்திகள் முறையாக தான் வெளியாகின.
ஊடகங்கள் யூகங்களை எழுதியபோது நோட்டீஸ் அனுப்பப்பட்டது- ஆணையம்
ஆனால் ஊடக செய்தி மற்றும் யூகத்தின் அடிப்படையில் தான் ஆணையம் விசாரணை நடத்தியது என குற்றம்சாட்டுவதை முற்றிலும் நிராகரிக்கிறோம், அத்தகைய கூற்று தவறானது. ஆணையம் தான் அனைத்து விசயங்களையும் ஊடகத்துக்கு கசிய விட்டது, கொடுத்தது என கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
சில நேரங்களில் ஆணைய விசாரணை தொடர்பாக ஊடக செய்திகளில் தவறானவையாக வெளியானபோது ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, விசாரணை தொடர்பாக தங்கள் யூகங்களை சித்தரிக்கக்கூடாது என ஊடகங்களுக்கு விசாரணை ஆணையம் அறிவுறுத்தியும் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வாதங்களை தொடருவதற்காக, ஆறுமுகசாமி ஆணைய வழக்கு நாளைக்கு (நவ.25) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.