விளக்குகள் அணைப்பு. . குளிக்கும் நேரம் குறைப்பு: ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த நிலைமை! காரணம் யார்?
பாரீஸ்: எரிவாயு இறக்குமதியை ரஷியா குறைத்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகள் விளக்குகளை அணைத்தும், குளிக்கும் நேரத்தை குறைத்தும் எரிவாயு சேமிப்பில் ஈடுபட்டுள்ளது.
ரஷியா -உக்ரைன் இடையே 150 நாட்களை தாண்டி போர் நடந்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாடு சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா இந்த போரை தொடங்கியது.
இந்த போரை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவை வலியுறுத்தி வந்தனர்.
தைவானுக்கு பூச்சாண்டி காட்டும் சீனா! வரிந்துகட்டி ஆதரித்த ரஷியா - மூலக் காரணம் அமெரிக்கா
20 சதவீதமாக குறைத்தது
எனினும் போரை நிறுத்தாமல் ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு பல்வேறு பொருளாதார தடை விதித்தன.
இந்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் வழியாக ரஷியா எரிவாயு வழங்கி வரும் நிலையில் திடீரென அதன் விநியோகம் குறைக்கப்படும் என்று அறிவித்தது. நார்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழியாக வழங்கப்படும் விநியோகித்தை ரஷியா 20 சதவீதமாக குறைத்தது. ஏற்கனவே 40 சதவீத அளவே ரஷியா வழங்கி வந்த நிலையில் தற்போது மேலும் 20 சதவீதம் குறைக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகளுக்கும் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எரிவாயு தேவைக்காக ரஷியாவை நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு இது பெரும் கவலை அளித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனி மட்டும் ரஷியாவிடம் இருந்து 55 சதவீதம் எரிவாயு இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஷியா திடீரென இறக்குமதியை குறைத்தால் அந்நாடுகளுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷியா எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ளாதால், கடும் பற்றாக்குறையை எதிர்கொள்ளத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே எடுக்க தொடங்கிவிட்டன. குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தற்போதே தங்கள் எரிவாயு தேவையை குறைக்க தயாராகி வருகின்றன.
சிக்கன நடவடிக்கை
ஜெர்மனியில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் 15 சதவீதம் எரிவாயு தேவையை குறைக்க திட்டமிட்டுள்ள அரசு, இதற்கான நடவடிக்கையில் இப்போதே இறங்கியுள்ளது. ரஷியா ஒருவேளை முற்றிலும் எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால் கூட அதை சமாளிக்க, தற்போது எடுக்க கூடிய நடவடிக்கைகள் கைகொடுக்கும் என்று ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன. வரலாற்று சின்னங்களில் ஒளிர்ந்த விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. தெருவிளக்குகள் நள்ளிரவுக்கு மேல் அணைக்கப்படுகின்றன. செயற்கை நீருற்றுகள் இயங்கவில்லை. இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் எரிவாயு விநியோகம் குறைக்கப்பட்டால் கூட தொழிற்சாலைகள் தங்கு தடையின்றி இயங்கும் என்று ஐரோப்பிய நாடுகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
விளக்குகள் அணைக்கப்படுகின்றன
ரஷ்யா எரிவாயு விநியோகத்தை முழுமையாக நிறுத்தும் வாய்ப்பு உள்ளதால், ஐரோப்பா தயராக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென் தெரிவித்தார். இது மிகப்பெரிய சவால் என்றாலும் நம்மையும் நமது பொருளாதாரத்தையும் பாதுகாக்க இது கட்டாயம் அவசியமானது. ஐரோப்பிய நாடுகள் வேறு நாடுகளில் இருந்து ஆற்றலைப் பெற முயற்சிகளை மேற்கொண்டாலும், 2023-ம் ஆண்டுக்குள் ரஷியாவின் எரிவாயு விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டால் வரும் குளிர்காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
அதிக நேரம் குளிக்க வேண்டாம்
ஜெர்மனியில் பொது இடங்களில் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. நீச்சல் குளங்கள் சூடுபடுத்துவது குறைக்கப்படுவதால் குளிர்ச்சியாகவே மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றன. இதனால், நகர மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளதாகவும், இக்கட்டான நிலையில் நாம் இருப்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேவையற்ற தெருவிளக்குகள், போக்குவரத்து விளக்குகள் உள்ளிட்டவைகளை அணைக்க நடவடிக்கைகள் எடுத்துள்ள ஜெர்மனி, ஷவர்களில் அதிக நேரம் குளிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டால்?
குளிக்கும் நேரத்தை குறைப்பதால் எரிசக்தி வீணாவதை தடுக்க முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ஜெர்மனி பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக், குளிக்கும் நேரத்தை தாம் குறைத்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவது தாமாக முன் வந்து செய்ய வலியுறுத்தப்பட்டு வந்தாலும், கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் இவை அனைத்தும் கட்டாயம் ஆக்கப்படும் என்று ஐரோப்பிய கமிஷன் தெரிவித்துள்ளது.