ஓயுமா உக்ரைன் விவகாரம்..105 நிமிடங்கள் போனில் பேச்சு வார்த்தை.. பைடனும் புடினும் சந்திக்க வாய்ப்பு?
பாரிஸ் : கிழக்கு உக்ரைனில் போர்நிறுத்தம் செய்ய பிரான்ஸ் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக பெலாரஸில் நடைபெற்று வரும் இராணுவப் பயிற்சிகள் முடிவடைந்தவுடன் ரஷ்யப் படைகளை அங்கிருந்து திரும்பப் பெற விரும்புவதாக புடின், தன்னுடனான தொலைபேசி உரையடலில் கூறியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல்போக்கு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் போர் பதற்றம் கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது.
எல்லைப் பகுதிகளில் படைகளை நிறுத்தி உள்ள ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் பதற்றம்
போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்கப்போவதில்லை என ரஷ்யா கூறி வருகிறது. இருந்தாலும் எல்லைகளில் தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வருவதால் போர் பதட்டம் தணியவில்லை. இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த ராணுவத்தின் ஒரு பகுதியினர் உக்ரைன் எல்லையில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டு உள்ளனர் என ரஷ்யா கூறியது.

படைகள் குவிப்பு
ஆனால் அதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை என நேட்டோ தெரிவித்துள்ளது. மேலும் படை வீரர்களை திருப்பி அனுப்புவதாக கூறி விட்டு மேலும் படைகளை குவித்து வருவதாக தவறாக வழி நடத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 7,000 வீரர்கள் 48 மணி நேரத்திற்குள் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சமாதானம் என்று வெளியில் கூறிவிட்டு படைகளை எல்லையில் குவிப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதற்கு கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளது.

போனில் பேச்சு
இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார், 105 நிமிடங்கள் நீடித்த ஒரு தொலைபேசி உரையாடலில், பெலாரஸில் நடைபெற்று வரும் இராணுவப் பயிற்சிகள் முடிவடைந்தவுடன் ரஷ்யப் படைகளை அங்கிருந்து திரும்பப் பெற விரும்புவதாக புடின் தெரிவித்ததாக மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் ஒரு புதிய அமைதி மற்றும் பாதுகாப்பு ஒழுங்கை வரையறுக்கும் நோக்கத்துடன் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நோக்கிச் செயல்பட இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பைடன் - புடின் சந்திப்பு?
மேலும், உக்ரைனில் ஒரு போரைத் தடுக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ரஷ்யாவின் விளாடிமிர் புடினை "எந்த நேரத்திலும்" சந்திக்கத் தயாராக இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு போரைத் தடுக்க உதவுமானால், எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் விளாடிமர் புட்டினைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மிகத் தெளிவாக ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற அச்சமும் எல்லைப் பகுதிகளில் நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு ரஷ்யா அணு ஆயுதங்கள் மூலம் பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications