அக்னிபாத்.. அக்னி குண்டமான பீகார்.. பாஜக எம்எல்ஏக்களை குறி வைத்து தாக்கும் போராட்டக்காரர்கள்
பாட்னா: அக்னிபாத் திட்டத்துக்கு பீகாரில் 3வது நாளாக போராட்டம், வன்முறை நடக்கிறது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏவின் வீட்டை சூறையாடப்பட்ட நிலையில் பெண் எம்எல்ஏவின் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பாஜக அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டு இருந்தது.
ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றில் அக்னிபாத் எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் அதுபற்றி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரிவாக கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் உள்ள முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலமாக 4 ஆண்டு வரை பணி செய்ய முடியும். அவர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 வரை சம்பளம் வழங்கப்படும்.
செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுப்பதை விட மோசம்! அக்னிபாத் திட்டம் வேண்டாம்! தமிமுன் அன்சாரி எதிர்ப்பு!
இளைஞர்கள் போராட்டம்
இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மேலும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ள இளைஞர்கள் மத்தியில் இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்தியில் ராணுவம் உள்ளிட்ட முப்பைடைகளிலும் குறுகிய கால பணி என்பதை இளைஞர்களால் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தனர்.
ரயில் எரிப்பு
இந்த போராட்டத்துக்கு நேற்று முன்தினம் பீகார் பிள்ளையார் சுழி போட்டது. பீகாரில் நேற்று முன்தினம் துவங்கிய போராட்டம், ஜார்கண்ட், தமிழகம், தெலுங்கானா, தமிழகம் என பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக பீகாரில் இளைஞர்கள் உக்கிரமாக போராட்டம் நடத்துகின்றனர். சாலையில் டயர்களை எரித்து எதிர்ப்பை தெரிவிப்பதோடு, ரயில் நிலையங்களில் மறியல் செய்கின்றனர். நேற்று ரயில்களை தீவைத்து எரித்த சம்பவமும், பாஜக அலுவலகத்துக்கு தீவைத்த சம்பவமும் நடந்தது. இதையடுத்து பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு தடியடி நடத்தப்பட்டது.
குறிவைத்து தாக்குதல்
இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதற்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை. இன்றும் பீகாரில் 3வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் தான் பீகாரில் பாஜக தலைவர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வீடு சூறை; கார் மீது கல்வீச்சு
சபாராவில் உள்ள பாஜக எம்எல்ஏ சிஎன் குப்தாவின் வீடு சூறையாடப்பட்டுள்ளது. மேலும், வாசிசாலிகஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ அருணாதேவி காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் எம்எல்ஏ, டிரைவர், 2 பாதுகாவலர்கள், 2 உதவியாளர்கள் காயமடைந்தனர். கார் சேதமானது. இதுபற்றி எம்எல்ஏ அருணாதேவி கூறுகையில், ‛‛காரில் இருந்த கொடியை பார்த்துகற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என குற்றம்சாட்டினார்.
அலுவலகத்துக்கு தீவைப்பு
முன்னதாக நவாடா அருகே உள்ள பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டது. இதுபற்றி நவாடா மாவட்ட பாஜக தவைர் சஞ்சய் குமார் முன்னா கூறுகையில், ‛‛பாஜக அலுவலகத்தின் வளாகத்தில் திரண்டவர்கள் சில அசம்பாவித செயல்களை செய்தனர். அலுவலகம் பூட்டப்பட்டு யாரும் உள்ளே இல்லை. இதனால் உயிர்தேசம் ஏற்படவில்லை. இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்றார். இதேபோல் ராஜ்யசபா எம்பியும் , முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடியும் இத்தகைய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
125 பேர் கைது
இதற்கிடையே பீகாரில் போராட்ட வன்முறையில் 16 போலீசார் காயமடைந்துள்ளனர். இதுவரை 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சஞ்சய் சிங் கூறியுள்ளார்.