பீகாரில் ஆட்சி அமைத்த மறுநாளே கிளம்பும் புகைச்சல்? சோனியா காந்திக்கு லெட்டர் போட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
பாட்னா: பீகாரில் கூட்டணி ஆட்சி அமைந்து சில நாட்களே ஆகும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ அங்குப் பரபரப்பைக் கிளப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் மாதம் ஆட்சியில் இருந்த சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கட்சிகளின் மகா விளாஸ் கூட்டணி கவிழ்ந்தது. அங்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
இது நடந்து சில வாரங்களிலேயே பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ளது. பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது.
பீகார் சட்டசபையில் ஆக.24-ல் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
பீகார்
கடந்த 2020இல் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாகத் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களைப் பெற்றது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக உடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தார் நிதிஷ் குமார். பாஜக அங்கு 74 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், நிதிஷ் குமார் கட்சி வெறும் 43 இடங்களை மட்டுமே பெற்றது.
புதிய ஆட்சி
இருந்த போதிலும் நிதிஷ்குமாரே முதல்வராகத் தொடர்வார் என அறிவித்தது பாஜக! முதலில் இரு தரப்பிற்கும் இடையே எவ்வித சிக்கலும் இல்லை என்றாலும் கூட சமீப காலமாக பாஜக மற்றும் நிதிஷ் குமார் இடையே மோதல் நிலவி வந்தது. டெல்லியில் நடந்த பல முக்கிய கூட்டங்களில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை இந்தச் சூழலில் தான் அவர் கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உடன் சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளார்.
அமைச்சரவை
நிதிஷ் குமார் எட்டாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பதவி ஏற்றார். விரைவில் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி ஏற்ற போதிலும், அதிகபட்ச இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ஆர்ஜேடி கட்சிக்கே அமைச்சரவையில் அதிக இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்எல்ஏ
இந்நிலையில், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மறுநாளே அமைச்சரவை தொடர்பாகக் காங்கிரஸ் எம்எல்ஏ அக்கட்சியின் தலைமைக்குக் கடிதம் எழுதி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதி அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அடிப்படையில் தனக்குப் பீகார் அமைச்சரவையில் இடம் தர வேண்டும் ககாரியா சதார் தொகுதி எம்எல்ஏவான சத்ரபதி யாதவ் காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதி உள்ளதாகக் கூறப்படுகிறது.
லெட்டர்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளேன். என்னை அமைச்சரவையில் சேர்த்தால் அது ஓபிசி பிரிவினர், குறிப்பாக யாதவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் என்னைப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். பீகாரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒரே யாதவ் எம்எல்ஏ நான் மட்டுமே.
தலைமுறை தலைமுறையாக
நான் எதோ இப்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்தவன் இல்லை. தலைமுறை தலைமுறையாக காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பவர்கள் நாங்கள். எனது மறைந்த தந்தை ராஜேந்திர பிரசாத் யாதவ் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். அவர் பிந்தேஸ்வரி துபே, பகவத் ஜா ஆசாத் மற்றும் ஜெகநாத் மிஸ்ரா ஆகிய மூன்று முதல்வர்கள் அமைச்சரவையில் மாநிலத்திற்குச் சேவை செய்தவர்" என்று அவர் தெரிவித்தார்.
எத்தனை இடங்கள்
பீகாரில் 16 எம்எல்ஏக்களைக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள், வெளியே இருந்து ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளன. 19 பேரைக் கொண்ட காங்கிரஸுக்கு 4 அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், யாருக்கு அமைச்சர் பொறுப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்பது குறித்து காங்கிரஸ் தலைமையே இறுதி முடிவை எடுக்கும் என்று பீகார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மதன் மோகன் தெரிவித்துள்ளார்.