"நீங்கலாம் அரசியலில் தீண்டத்தகாதவராக இருந்தீங்க".. பாஜகவை விட்டு விளாசிய நிதிஷ்குமார் கட்சி!
பாட்னா: "நீங்கலாம் அரசியலில் தீண்டத்தகாதவராக இருந்தீங்க" என பாஜனதாவை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா விமர்சித்துள்ளார்.
பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகியதும் அவரை பீகார் பாஜக அரசியல் தலைவர்கள் வறுத்தெடுக்க தொடங்கினர்.
பீகார் சட்டசபையில் ஆக.24-ல் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
கடுமையான விமர்சிப்பு
இதனால், பாஜக - ஐக்கிய ஜனாதா தளம் கட்சி இடையே மாறி.. மாறி.. வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர்களான சுஷில் மோடி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர், நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து இருந்தனர். பலமுறை மத்திய அமைச்சராகவும், சட்ட சபையில் பலம் குறைந்த கட்சியாக இருந்தாலும் நிதிஷ்குமாரை முதல்வராகவும் பாஜக ஆக்கியது. இதற்காக நன்றியுடன் இருந்து இருக்க வேண்டும் என சாடியிருந்தனர்.
தீண்டத்தகாத கட்சி
மேலும், ஐக்கிய ஜனாதா தளம் கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்படும் என்றும் கேலி செய்து இருந்தனர். இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா, 'பாஜக தலைவர்களின் கருத்து ஆட்சேபத்திற்குரியது மட்டும் அல்ல. இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது' என்றார். மேலும் பாஜகவை கடுமையாக சாடிய குஷ்வாஹா தொடர்ந்து கூறுகையில், 1995-96 க்கு முன்பாக பாஜக அரசியலில் தீண்டத்தகாத கட்சியாக கருதப்பட்டது.
சம்தா கட்சியுடன் கூட்டணி
அவர்களுடன் எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அப்போதைய சம்தா கட்சியின் தலைவர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசும் நிதிஷ்குமாரும் தேவதூதர்கள் போல வந்து பாஜகவை மீட்டனர். பாஜகவின் மும்பை கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்பிறகு சம்தா கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டது. அப்போதுதான் தீண்டத்தகாத அந்த கட்சியில் இருந்து அனைவரும் கூட்டணி வைக்கும் கட்சியாக மாறியது.
எந்த தடயமும் இருந்திருக்காது
ஜார்ஜ் பெர்னாண்டசும் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் உங்களைப் பற்றிய எந்த தடயமும் இருந்து இருக்காது" என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இந்த பதிவு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.