பீகாரில் 78 தொகுதிகளில் நாளை இறுதி கட்ட வாக்குப் பதிவு- பலமுனைப் போட்டியால் உக்கிரம்!
பாட்னா: பீகாரில் 16 மாவட்டங்களில் 78 சட்டசபை தொகுதிகளில் நாளை இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பலமுனை போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு இதுவரை 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளன. அக்டோபர் 28, நவம்பர் 3 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
3-வது மற்றும் இறுதி கட்டமாக 16 மாவட்டங்களில் 78 சட்டசபை தொகுதிகளில் நாளை சனிக்கிழமையன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் வியாழக்கிழமை மாலை பிரசாரம் ஓய்ந்தது.
பீகார்: 2ம் கட்ட வாக்குப் பதிவு இடங்களில் இன்று பிரசாரம் ஓய்வு! மோடி 4 கூட்டங்களில் பங்கேற்பு
78 தொகுதிகளில் பல முனைப்போட்டி
கடந்த 2 கட்ட தேர்தல்களில் ஆளும் ஜேடியூ-பாஜக மற்றும் ஆர்ஜேடி-காங்கிரஸ் இடதுசாரிகள் இடையே இரு முனைப் போட்டி நிலவியது. ஆனால் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியும் தனித்து போட்டியிடும் தொகுதிகள் இடம்பெற்றிருப்பதால் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. மேலும் உபேந்திரா குஷாவாவின் ஆர்.எல்.எஸ்.பி, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், பப்பு யாதவின் ஜன் ஆதிகார் கட்சி ஆகியவையும் 3-ம் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் தொகுதிகளில் களம் காணுகின்றன.
2015 வெற்றி நிலவரம்
2015 சட்டசபை தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 78 தொகுதிகளில் 58 இடங்களை ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கைப்பற்றி இருந்தன. அப்போது ஜேடியூ, ஆர்ஜேடி அணியில் இருந்தது. அந்த தேர்தலில் பாஜக தலைமையிலான அணி 24 இடங்களில் வென்றது. பாஜக மட்டும் 19 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. அதாவது ஜேடியூ 28; ஆர்ஜேடி- 20; பாஜக 19; காங்கிரஸ் 10 தொகுகளில் வென்றிருந்தன.
ஆர்ஜேடி கோட்டை
78 தொகுதிகளில் சீமாஞ்சல் பிராந்தியத்தில் 24 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் ஆர்ஜேடி கூட்டணி இந்த பிராந்தியத்தில் 14 தொகுதிகளை தன் வசம் வைத்திருக்கிறது. சீமாஞ்சல் பிராந்தியமானது முஸ்லிம்கள்- யாதவ் இணைந்த வாக்கு வங்கி பகுதியாகும். இங்கு காலந்தோறும் ஆர்ஜேடிதான் அறுவடை செய்து வருகிறது. ஓவைசி, உபேந்திரா கட்சி வேட்பாளர்கள், ஆர்ஜேடி வேட்பாளர்களின் வெற்றிகளில் விளையாட வாய்ப்புண்டு.
மிதிலாஞ்சல் பிராந்தியம்
78 தொகுதிகளில் மிதிலாஞ்சல் பிராந்தியத்தில் 38 தொகுதிகள் உள்ளன. இந்த பிராந்தியம் பாஜகவுக்கு மிகவும் சவாலானதாகவே இருக்குமாம். கடந்த தேர்தலில் பாஜகவுக்கு இந்த பிராந்தியத்தில் 6 இடங்கள்தான் கிடைத்தன. ஆகையால்தான் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்களும் மிதிலாஞ்சல் வளர்ச்சி குறித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.