உச்சகட்ட குழப்பம்.. தலைவர் பதவியிலிருந்தே சிராக் பாஸ்வானை நீக்கிய அதிருப்தி எம்பிக்கள்..அடுத்து என்ன
பாட்னா: பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தல் நிதிஷ்குமாரின் ஜேடியூவுக்கு எதிராகக் களமிறங்கிய கட்சி லோக் ஜனசக்தி. நிதிஷ்குமார் தேர்தலில் அதிக இடங்களில் வெல்வதைத் தடுக்க பாஜக தான் ஆர்ஜேடி கட்சியை பி டீமாக இறக்கியுள்ளதாகப் பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் லோக் ஜனசக்தியில் தற்போது உள்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது. மக்களவையில் லோக் ஜனசக்தி கட்சி சிராக் பாஸ்வானையும் சேர்த்து மொத்தம் ஆறு எம்பிகள். சிராக் பாஸ்வானை தவிர மற்ற ஐந்து பேரும் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற கட்சித் தலைவராக சிராக் பஸ்வானை நீக்கிவிட்டு பசுபதி குமாரை நியமிக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அக்கட்சி எம்பிகள் கடிதம் கொடுத்தனர். இந்தக் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டார்.
அதிருப்தி எம்பிகள் அனைவரையும் வழிநடத்துபவர் பசுபதி குமார். இவர் வேறு யாருமில்லை லோக் ஜனசக்தியின் முன்னாள் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானின் தம்பி. அதாவது சிராஜ் பஸ்வானின் சித்தப்பா.
இந்நிலையில், சிராக் பாஸ்வானுக்கு மிகப் பெரிய அடியாக அதிருப்தி எம்பிகள் இணைந்து அவரை லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். சிராக் பாஸ்வான் கட்சியில் மூன்று பதவிகளை வைத்திருந்ததாகவும் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும், தற்போது கட்சியின் செயல் தலைவராக, சுராஜ் பான் செயல்படுவார் என்றும், விரைவில் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே பசுபதி குமார் பராஸ் உள்ளிட்ட ஐந்து எம்பிக்கள் கட்சியிலிருந்து நீக்குவதாகப் பதிலடி கொடுத்துள்ளார் சிராக் பாஸ்வான். இப்படி மாறிமாறி வெளியாகியுள்ள அறிவிப்புகளால் அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.