"இந்தியா என்ன உங்கள் தந்தைக்கு சொந்தமானதா?" பாஜகவை விளாசிய ஆர்ஜேடி தலைவர் அப்துல் சித்திக்கி
பாட்னா: தன்னை பாகிஸ்தான் செல்லுமாறு பாஜகவினர் கூறியதால் ஆத்திரமடைந்த ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் அப்துல் பாரி சித்திக்கி, "இந்தியா என்ன உங்கள் தந்தைக்கு சொந்தமானதா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
"இந்தியாவில் இருக்க கஷ்டமாக இருந்தால் குடும்பத்துடன் பாகிஸ்தான் செல்ல வேண்டியதுதானே" என பாஜக கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அப்துல் சித்திக்கி இவ்வாறு கூறியுள்ளார்.
அப்துல் சித்திக்கி - பாஜகவினர் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வார்த்தைப் போர், தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மதமோதல்.. "எனது பிள்ளைகளை இந்தியா வர வேண்டாம் என கூறிவிட்டேன்".. ஆர்ஜேடி தலைவர் சர்ச்சை பேச்சு
"இந்தியா வராதீர்கள்"
லாலு பிரசாத் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் மூத்த தலைவராக இருப்பவர்
அப்துல் சித்திக்கி. லாலு தலைமையில் ஆர்ஜேடி ஆட்சி நடந்த போது அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார். அவர் நேற்று முன்தினம் தெரிவித்த கருத்துதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவில் நடந்த ஆர்ஜேடி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "எனது மகன் ஹார்வார்டு
பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். எனது மகள் லண்டனில் படிப்பை முடித்திருக்கிறார். அவர்களிடம் இனி இந்தியாவுக்கு வராதீர்கள் எனக் கூறிவிட்டேன். இந்தியாவில் மத ரீதியிலான பாரபட்சம் அதிகமாக இருப்பதால் நீங்கள் அங்கேயே வாழ்க்கையை நடத்துங்கள் எனக் கூறியிருக்கிறேன்" என்றார்.
"பாகிஸ்தான் செல்லுங்கள்" - பாஜக
அப்துல் சித்திக்கின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவருக்கு பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிக்கில் ஆனந்த்,
பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "சித்திக்கி இந்தியாவுக்கு எதிராக பேசியுள்ளார். இந்தியாவில் இருப்பது கஷ்டமாக இருந்தால், ஒரு அரசியல் தலைவராக அவர் இந்தியாவில் அனுபவிக்கும் சலுகைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். இன்னும் கஷ்டமாக இருந்தால், தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் சித்திக்கி குடியேறிக் கொள்ளட்டும். அவரை யாரும் தடுக்கப்போவதில்லை" என அவர் கூறினார். இதேபோல, பல பாஜக தலைவர்களும் சித்திக்கியை பாகிஸ்தான் செல்லுமாறு கூறினர்.
"உங்கள் தந்தைக்கு சொந்தமானதா?"
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அப்துல் சித்திக்கி கூறியதாவது: நானும் பல முறை பார்த்திருக்கிறேன். எந்த முஸ்லிம் தலைவர் கருத்து தெரிவித்தாலும், பாஜகவினர் ஒன்றாக கூடி "பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்.. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்.." என கோஷமிடுகிறார்கள். நான்
தெரியாமல்தான் கேட்கிறேன். என்னை பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு போக சொல்வதற்கு நீங்கள் யார்? நீங்கள் மட்டும்தான் இந்தியாவில் இருக்க வேண்டுமா? இல்லையென்றால், இந்தியா உங்கள் தந்தைக்கு சொந்தமானதா?
"மன்னிப்பு கேட்க முடியாது"
நான் எனது மகன் மற்றும் மகளிடம் கூறியது எனது சொந்த கருத்து. தற்போது இந்தியாவில் நிலவி வரும் சூழலை பார்க்கும் எனக்கு என்ன தோன்றியதோ, அதைதான் என் பிள்ளைகளிடம் கூறினேன். இந்தியாவில் தனிப்பட்ட கருத்தை கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நான் பேசியது யாரையும் புண்படுத்தி இருக்காது. ஒருசிலருக்கு குற்ற உணர்வை வேண்டுமானால் ஏற்படுத்தி இருக்கும்.
எனது பேச்சுக்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது. இவ்வாறு அப்துல் சித்திக்கி கூறினார்.