என்னது சரக்கா! அந்த ஜடியா இருந்தா மறந்திடுங்க.. பீகார் முதல்வர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் - காரணம் தெரியுமா?
பாட்னா: பீகார் மாநிலத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் நிதீஷ் குமார் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் மதுவிலக்கைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மதுவால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக முக்கிய வாதம்.
ஆனால், பெரும்பாலான இந்திய மாநிலங்களுக்கு மது விற்பனை மூலம் கணிசமான அளவு வருவாய் கிடைக்கிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் தடை விதிக்க யோசிக்கின்றன.

பூரன மது விலக்கு
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களைத் தடை செய்வது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம். இந்தியாவில் 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மட்டுமே பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்று பீகார். அதேபோல குஜராத், மிசோரம், நாகாலாந்து மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் மது விலக்கு அமலில் உள்ளது.

வெளியான தகவல்
இதனிடையே வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை ஈர்க்கும் வகையில் மதுவிலக்கை நீக்குவது தொடர்பாகப் பீகார் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. குறைந்தபட்சம் மதுவிலக்கில் சில தளர்வுகளாவது அறிவிக்கப்படும் என்றும் இது தொடர்பாகப் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்,

பீகார் முதல்வர் பேச்சு
பீகாரின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான சசாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், "வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் குறைந்த அளவு மது அருந்த அனுமதிக்க வேண்டும் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அது சாத்தியமா? அவர்களுக்கு மது அருந்த அனுமதி அளிக்கப்படுமா? பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை மட்டும் மது அருந்த அனுமதிக்க முடியுமா?

வர வேண்டாம்
அவர்களுக்கு எல்லாம் நான் ஒரே ஒரு பதிலை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தயவு செய்து பீகாருக்கு வராதீர்கள். நீங்கள் மது அருந்தியே ஆக வேண்டும் அல்லது இங்கு இருக்கும் மது விலக்கு உங்களுக்குப் பிரச்சனை என்றால் தயவு செய்து பீகாருக்கு வராதீர்கள். அப்படி யாரும் பீகாருக்கு வர வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு மட்டும் மது குடிக்க அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை.

மகாத்மாவுக்கு எதிரானவர்கள்
ஒருவர் மது அருந்தினால் எவ்வளவு படித்தவராகவும், அறிவாளியாகவும் இருந்தாலும், அவர்கள் திறமையானவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அத்தகைய திறமையற்றவர்கள் மற்றும் மகாத்மா காந்திக்கு எதிரானவர்கள், சமூகத்திற்கு எதிரானவர்கள்" என்றும் அவர் கூறினார். இதன் மூலம் பீகார் மாநிலத்தில் மது விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை முதல்வர் நிதீஷ் குமார் திட்டவட்டமாகத் தெளிவாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications