மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்.. நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி செம போட்டி.. ஏபிபி-சி வோட்டர் சர்வே
பாட்னா: பீகார் மக்களில் பெரும்பாலானோர், நிதிஷ் குமாரே மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்கிறது ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு.
இந்த லிஸ்டில் இரண்டாவது இடம் லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வினி யாதவுக்கு கிடைத்துள்ளது.
பீகார் தேர்தல்களில் நிதீஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ மொத்தமுள்ள 243 இடங்களில் 135 முதல் 159 இடங்களை வெல்லக் கூடும் என்று கருத்துக் கணிப்பு கூருகிறது.
பீகாரில் வெல்லப்போவது யார்? வெளியானது ஏபிபி டிவி- சி வோட்டர் சர்வே
எதிர்க்கட்சிகள்
ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய கூட்டணி 77 முதல் 98 இடங்களுடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. ராம் விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி, 1 முதல் 5 இடங்களை பிடிக்கும். மற்ற கட்சிகள் 4-8 இடங்களைப் பெறக்கூடும்.
நிதிஷ் குமார் முதலிடம்
அதேநேரம், யார் உங்களுடைய விருப்பமான முதல்வர் வேட்பாளர் என்று கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, 29.5 சதவீதம் மக்கள், நிதிஷ் குமார்தான் தாங்கள் விரும்பும் சிஎம் என்று கூறியுள்ளனர். 3 முறை முதல்வராக பதவி வகித்தாலும் நிதிஷ் குமாரின் செல்வாக்கு பெரிதாக சரிவடையவில்லை என்பதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.
தேஜஸ்வி யாதவுக்கு 2வது இடம்
அதேநேரம், தேர்தல் பிரச்சாரங்களில் பெருமளவுக்கு கூட்டங்களை கூட்டுவதாக எதிர்க்கட்சி கூட்டணி பெருமிதப்பட்டாலும், தேஜஸ்வி யாதவுக்கு முதல்வராக 19.9 சதவீதம் பேர் ஆதரவு அளிப்பதாக இந்த கருத்துகக் கணிப்பு கூறுகிறது. அதேநேரம், லாலு பிரசாத் யாதவின் பிரபல்யம் ரொம்பவே குறைந்து போயுள்ளது. அவர் முதல்வராக வர வேண்டும் என்று 9.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
சிராக் பாஸ்வான் செல்வாக்கு
சிராக் பாஸ்வான் முதல்வராக வேண்டும் என்று, 13.18 சதவீதம் பேர் விரும்பியுள்ளனர். தேஜஸ்வி யாதவுக்கு பிறகு, அவர்தான் அதிக செல்வாக்கு மிக்க முதல்வர் வேட்பாளராக உள்ளார். இது ராம்விலாஸ் பாஸ்வான் மகனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிப்பதை காட்டுகிறது. இந்த தேர்தலில் சிராக் பாஸ்வான் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
யார் ஆட்சி சிறந்தது?
லாலு பிரசாத் யாதவின் 15 ஆண்டுகால ஆட்சிக்கும், நிதீஷ்குமாரின் 15 ஆண்டுகால ஆளுகைக்கும் இடையேயான ஒப்பீடு குறித்து மக்களிடம் கேட்டபோது, சர்வேயில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட மக்கள், குறிப்பாக, கிழக்கு பீகார், மகத்-போஜ்பூர், மிதிலாஞ்சல், சீமாஞ்சல் மற்றும் வடக்கு பீகார் பிராந்தியங்களிலுள்ள மக்கள், நிதிஷ்குமார்தான் சிறந்த ஆட்சி வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.