திரும்பிவந்துட்டேன்னு சொல்லு... ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை ஏன் தடை செய்யலை... லாலு பிரசாத் யாதவ் கேள்வி!
பாட்னா: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை தடை செய்த மத்திய அரசு ஏன் இந்துமதவெறி பரப்பும் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை தடை செய்யவில்லை என்று ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்.இயக்கங்களை மிக கடுமையாக எதிர்க்கக் கூடிய தலைவர்களில் லாலு பிரசாத் யாதவ் முதன்மையானவர். மாட்டுத் தீவன் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்தார்.
இவ்வழக்குகளில் ஜாமீனில் விடுதலையான லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் ஓய்வெடுத்திருந்தார். இதனால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தும் வந்தார்.

லாலு-நிதிஷ்
அண்மையில் பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ஜேடியூ- லாலுவின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இணைந்து புதிய ஆட்சி அமைத்தது. பின்னர் டெல்லியில் லாலு பிரசாத் யாதவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோனியா காந்தியை நிதிஷ், லாலு இருவரும் சந்தித்து பேசினர். இச்சந்திப்பு தேசிய அரசியலில் மிக முக்கியத்துவமானதாக பார்க்கப்பட்டது.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வருகின்றன. இதற்கான முயற்சிகளை பல்வேறு தலைவர்கள் முன்னெடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் தேசிய அரசியல், பீகார் அரசியலில் லாலுவின் மீள் வருகை மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்-க்கு ஏன் தடை இல்லை?
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்துமதவெறியை பரப்புகிற ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை ஏன் மத்திய அரசு தடை செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார் லாலு பிரசாத் யாதவ்.

பிஎப்ஐ மீது தடை
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது பல்வேறு மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் கோரிக்கை. அண்மையில் இந்த இயக்கத்தின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications