தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மோசடி.. தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டு.. 10 தொகுதிகள் 'டார்கெட்'
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சி முறைகேட்டில் ஈடுபடுவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகியோர் மாவட்ட அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து போட்டி மிக நெருக்கமாக இருக்கக் கூடிய தொகுதிகளில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் செய்து வருவதாக தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் இதுவரை எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 122 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அடங்கிய கூட்டணி 114 இடங்களில் முன்னணி வகிக்கிறது.
இந்த நிலையில்தான் தேஜஸ்வி ஹிந்தியில் டுவிட் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி 12 மணி நேரம் தாண்டிவிட்டது. ஆனால் சுமார் 10 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் கொடுக்காமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது. முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகியோர் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக, எந்தெந்த தொகுதிகளில் போட்டி நெருக்கமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் ரிசல்ட் : முந்தும் பாஜக கூட்டணியை விடாது விரட்டும் ஆர்ஜேடியின் மகா கூட்டணி
அதுமட்டுமின்றி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், 119 சட்டசபை தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தங்கள் கட்சி அல்லது தங்களின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ள தொகுதி இவை என்றும், அதை அறிவிக்கவில்லை என்றும், பகீர் குற்றச் சாட்டை முன்வைத்துள்ளது அந்த கட்சி.
வெற்றிக்கான சான்றிதழை வாங்காமல் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து கிளம்ப வேண்டாம் என்று எங்களது வேட்பாளர்களுக்கு தெரிவித்துள்ளோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனோஜ் ஷா தெரிவித்தார்.
இரவு 8.30 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகார பூர்வமான அறிவிப்பின்படி, 100 தொகுதிகளில் கட்சிகளுக்கு இடையே வெறும் 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் இழுபறி நிலை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டை அதிகாரப்பூர்வமாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்காக ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் விரைந்துள்ளனர்.