வேறு வழியில்லை..இந்தியாவில் சில முஸ்லிம்கள் விருப்பப்பட்டு வசிக்கவில்லை.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை
பாட்னா: இந்தியாவை குறைக்கூறும் சில முஸ்லிம்கள் இங்கு விருப்பப்பட்டு வசிக்கவில்லை.. வேறு வழியில்லாமல்தான் வசிக்கிறார்கள் என உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ மொஹ்சின் ராஸா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மத ரீதியான பாரபட்சம் நிலவுவாக பீகார் ஆர்ஜேடி கட்சித் தலைவர் அப்துல் சித்திக்கி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மொஹ்சின் ராஸா இவ்வாறூ கூறியுள்ளார்.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரான மொஹ்சின் ராஸாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், முஸ்லிம் அமைப்புகளும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

"இந்தியா வேண்டாம்"
லாலு பிரசாத் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும், முன்னாள் பீகார் அமைச்சருமான அப்துல் பாரி சித்திக்கி, பாட்னாவில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "எனது மகன் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். எனது மகள் லண்டனில் படிப்பை முடித்திருக்கிறார். அவர்களிடம் நான் சொன்னது ஒன்றே ஒன்றுதான். அது இந்தியா வர வேண்டாம் என்பதுதான்.

"முஸ்லிம்கள் மீது பாரபட்சம்"
நான் அப்படி கூறியதும் அவர்கள் ஏன் எனக் கேட்டனர். இந்தியாவில் இப்போது சூழல் சரியாக இல்லை. முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக மிகப்பெரிய பாரபட்சம் காட்டப்படுகிறது. எனவே, அங்கேயே வேலை தேடுங்கள். முடிந்தால் அங்கேயே 'செட்டில்' ஆகிவிடுங்கள் எனக் கூறியிருக்கிறேன். யோசித்து பாருங்கள்.. ஒருவன் தனது பிள்ளைகளிடம் சொந்த நாட்டிற்கு வராதீர்கள் எனக் கூறுவது எவ்வளவு கடினமானதாக இருக்கும். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை" என அப்துல் பாரி சித்திக்கி கூறினார்.

கொந்தளித்த பாஜக
இதனிடையே, அப்துல் சித்திக்கின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக,பாஜக செய்தித் தொடர்பாளர் நிக்கில் ஆனந்த் கூறுகையில், "சித்திக்கின் பேச்சானது இந்தியாவுக்கு எதிரானது. இந்தியாவில் இருப்பது மிகவும் கஷ்டம் என நினைத்தால், ஒரு அரசியல் தலைவராக அவர் இங்கு அனுபவிக்கும் சலுகைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். மேலும், தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் குடியேறட்டும். அவரை யாரும் தடுக்கப்போவதில்லை. ராஷ்ட்ரிய ஜனதா தளம் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலை மட்டுமே செய்து வருகிறது. அவரது பேச்சு அக்கட்சியின் கலாச்சாரத்தை தான் எடுத்துக்காட்டுகிறது" என்றார்.

"முஸ்லிம் விருப்பப்பட்டு வசிக்கவில்லை"
இந்நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ மொஹ்சின் ராஸாவிடம் அப்துல் சித்திக்கின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த மொஹ்சின் ராஸா, "இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவை குறைக்கூறும் முஸ்லிம்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் விருப்பப்பட்டு வசிக்கவில்லை. வேறு வழியில்லாமல் வசிக்கிறார்கள். அப்துல் சித்திக்கியும் அப்படிப்பட்ட நபர்தான். இதுபோன்று இந்தியாவை தரக்குறைவாக பேசுபவர்கள் யாரென்று பார்த்தால் உங்களுக்கு ஒரு உண்மை தெரியவரும். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவர்களின் மூதாதையர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என விரும்பியிருப்பார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழலால் அவர்களால் பாகிஸ்தான் சென்றிருக்க முடியாது. தங்களால் பாகிஸ்தான் செல்ல முடியவில்லையே என இவர்கள் இப்போதும் கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள். அதனால்தான் இப்படி பேசுகிறார்கள்" என் மொஹ்சின் ராஸா கூறினார்.












Click it and Unblock the Notifications