பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக... தொடரும் முன்னிலை... உயரப் பறக்கும் பாஜக கொடி..!
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளை காட்டிலும் குறிப்பாக ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது பாஜக. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கினாலும் அடுத்த சில மணி நேரத்தில் காட்சிகள் மாறத் தொடங்கின.
பீகாரில் 127 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், அதில் பாஜக மட்டும் 73 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. இது மற்றக் கட்சிகள் பெற்ற முன்னிலை நிலவரங்களை காட்டிலும் அதிகம். நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 47 இடங்களிலும் விகாசீல் இன்சான் கட்சி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே மெகா கூட்டணி எனப்படும் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் கூட்டணியில் ஆர்.ஜே.டி. 61 இடங்களிலும் காங்கிரஸ் 20 இடங்களிலும், இடதுசாரிகள் 19 இடங்களிலும் முன்னிலை பெற்றிருக்கிறது. இதன் மூலம் பீகார் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளில் பாஜக மட்டுமே தனிப்பெரும் எண்ணிக்கையில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 சட்டமன்றத் தேர்தலில் 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜகவுக்கு இந்த தேர்தல் ஏறுமுகத்தை அளித்துள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.