Kottu Raja Encounter: பெரம்பலூரில் போலீஸ் என்கவுன்ட்டரில்! பிரபல ரவுடி கொட்டு ராஜா உயிரிழப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான கொட்டு ராஜா, போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற போது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி. இவரை வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் போலீஸார் கடந்த 24 ஆம் தேதி ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மீண்டும் போலீஸ் வாகனத்தில் சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் திருமாந்துறை டோல்கேட் அருகே போலீஸார் வாகனத்தை நிறுத்திவிட்டு ஹோட்டலில் உணவு அருந்தினர். ஒரு சில போலீஸார் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மற்ற போலீஸார் வாகனத்தில் இருந்த வெள்ளைக்காளிக்கு காவலாக இருந்தனர்.
அப்போது அங்கு திடீரென இரு கார்களில் வந்த கும்பல் போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெள்ளைக்காளியை வெட்டவும் முயற்சித்ததாம்.
உடனே சுதாரித்த எஸ்ஐ ராமசந்திரன், அந்த மர்மநபர்களை நோக்கி சுட்டதில் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். வெடிகுண்டு வீசியதில் வெள்ளைக்காளிக்கு பாதுகாப்பாக இருந்த போலீஸாரில் மருதுபாண்டி என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் வெள்ளைக்காளி காயங்களின்றி தப்பித்தார். போலீஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். அப்போது திருமாந்துறையில் இருந்து கடலூர் மாவட்டம் ஒரத்தூர் வழியாக காரில் சென்ற கும்பலை போலீஸார் பின்தொடர்ந்தனர்.
ஒரத்தூர் சுங்கச் சாவடியில் கூட அந்த கார் நிற்காமல் தடுப்புகளை மோதிவிட்டு சென்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுக்க உஷார் நிலை போடப்பட்டு போலீஸார் அவர்களை தேடி வந்தனர்.
கடலூர் மாவட்டம் எழுத்தூர் அருகே இரு கார்களில் ஒன்றை ஓரமாக நிறுத்தி விட்டு தப்பித்துள்ளனர். அந்த காரை திட்டக்குடி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 5 தனிப்படைகளை அமைத்த பெரம்பலூர் மாவட்ட போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் அழகுராஜ் என்பவரை நேற்று மாலை கைது செய்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக போலீஸார் அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசிய கொட்டு ராஜா, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் எஸ்.ஐ.சங்கரை வெட்டி விட்டு தப்பியோட முயன்றார்.
அப்போது மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் என்பவர் ரவுடி அழகுராஜை துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த கொட்டு ராஜா அங்கேயே உயிரிழந்தார். இந்த நிலையில் காயமடைந்த எஸ்.ஐ.சங்கர், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவுடி ஒருவர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதும், பதிலுக்கு என்கவுன்ட்டர் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications