40 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய புதுச்சேரி.. கடைகள், தொழிற்சாலைகள் செயல்படுகின்றன!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கின.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3 வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் ஒருசில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து புதுச்சேரி மாநில அரசும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
பெரும்பாலான கடைகள் திறப்பு
கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கின. கடைகளை பொறுத்தவரை, துணிக்கடைகள், செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், கட்டிட மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்ட், சானிட்டரிவேர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
9 டூ 5 திறப்பு
அதேபோல மின் மோட்டார் பழுது, கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல், மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள் அனைத்தும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவகங்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பார்சல் வாங்கிட்டுப் போகலாம்
உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லாததால், மக்கள் தங்களுக்கு தேவையான உணவு வகைகளை பார்சல் மட்டுமே வாங்கி செல்கின்றனர். இதேபோல் எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், சாலையோர டெய்லர், செருப்பு தைப்பவர், இருசக்கர வாகன பழுது பார்ப்பவர், காய்கனி வியாபாரிகள், சாலையோர டிபன் கடைகள், தனி நபர் நகைத் தொழிலாளி, இஸ்திரி போடுபவர், பூ வியாபாரி உள்ளிட்ட சுய தொழில் செய்பவர்களும் இன்று தங்களது பணியை தொடங்கியுள்ளனர்.
5 பேருக்கு மேல் கூடக் கூடாது
தொழிற்சாலைகளும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை கொண்டு இயங்குகின்றனர். அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருப்பதால், 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது. சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளை முறையாக கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.