புதுச்சேரி: பாஜகவுக்கு 2 அமைச்சர்கள் மட்டும்தான்.. அதுக்கு மேல எதுவும் கிடைக்காது. ரங்கசாமி கறார்!
புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகபட்சம் 2 அமைச்சர்கள்தான் தர முடியும்; சபாநாயகர் உள்ளிட்ட வேறு எந்த பதவியும் தரவே முடியாது முதல்வர் ரங்கசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனையடுத்து ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம் என டெல்லி பாஜக மேலிடம் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாம்.
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். அதேபோல் புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுவிட்டனர். ஆனால் அமைச்சரவை இன்னமும் பதவியேற்கவில்லை.
கொரோனா சிகிச்சை முடிந்து.. வீடு திரும்பினார் புதுவை முதல்வர் ரங்கசாமி
து. முதல்வர் பதவி நிராகரிப்பு
ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் முதலில் துணை முதல்வர் பிளஸ் 3 அமைச்சர்கள் பதவி கேட்டது பாஜக. இதனை எடுத்த எடுப்பிலேயே ரங்கசாமி நிராகரித்துவிட்டார்.
பாஜக புது நிபந்தனை
இதனால் 3 அமைச்சர்கள் பதவி பிளஸ் சபாநாயகர் பதவி கேட்டுப் பார்த்தது பாஜக. இதற்கும் ரங்கசாமி ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் புதுவை சட்டசபையில் தமது பலத்தை நியமன எம்.எ.ஏக்கள், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மூலமாக 12 ஆக அதிகரித்திருக்கிறது பாஜக.
டெல்லி பாஜக அதிருப்தி
இதனையடுத்து பாஜக அடுத்து என்ன செய்யுமோ என்கிற பதற்றத்தில் இருக்கிறது என்.ஆர். காங்கிரஸ் கட்சி. பாஜக தமது பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. என். ஆர் காங்கிரஸும் 2 அமைச்சர்கள் பதவி மட்டுமே தர முடியும். அதற்கு மேல் எதுவும் கிடைக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
அமைச்சரவை அமைப்பதில் இழுபறி
இது டெல்லி பாஜக மேலிடத்தை கடும் அதிருப்தி அடைய வைத்ததாம். இதனால் இனிமேல் ரங்கசாமி கட்சியுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம் என டெல்லி பாஜக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம். இதனால் புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பதில் இழுபறி தொடர்ந்து கொண்டிருக்கிறது.