ஜான் குமார் வீட்டில் ஒரே கூட்டம்.. இலவச காய் வாங்க.. 3 பிரிவுகளில் கேஸ் போட்ட கிரண் பேடி!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் உள்ளதால், வீட்டில் முடங்கியிருக்கும் பொதுமக்களுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை இலவசமாக வழங்கிய ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார். ஏற்கனவே நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், முதலமைச்சர் நாராயணசாமிக்காக தனது நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுகொடுத்தார்.
ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தனது தொகுதி மக்களுக்கு பணம், அரிசி, சர்க்கரை, இன்டக்ஷன் ஸ்டவ், ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு இலவச பொருட்களை வழங்குவார்.
வழக்கமான உதவிகள்தான்
மேலும் தனது தொகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஊக்கத்தொகையுடன் பரிசு பொருட்களையும் வழங்கி வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 23 ஆம் தேதி இரவு முதலே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கடைகள் அடைப்பு
இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் இரண்டு லாரிகள் முழுவதும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை பதுக்கி வைத்துள்ளதாக நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும் நேற்று மாலை முதல் 200 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் அடங்கிய பை ஒன்று சவரிபடையாட்சி வீதியில் உள்ள ஜான்குமார் வீட்டில் நெல்லித்தோப்பு பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
குமார் வீட்டில் கூட்டம்
இலவச காய்கறிகளை வாங்குவதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி 200 க்கும் மேற்பட்ட மக்கள் ஜான்குமார் வீட்டு முன்பு கூடியுள்ளனர். இதற்கு சமூக அமைப்புகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது மக்களை ஓர் இடத்தில் ஒன்றுகூட்டி இலவசங்களை வழங்கி, கொரோனா தொற்று எளிதாக பரவுவதற்கு ஜான்குமார் வழிவகை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
3 பிரிவுகளில் வழக்கு
இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் புகார்கள் சென்றன. இதனையடுத்து ஜான்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில், பேரிடர் சட்டத்தை மீறியதாக ஜான்குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 269, 188 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்குகளை உருளையன்பேட்டை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
110 பேர் மீது வழக்கு
மேலும் ஜான்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாபாரிகள் என மொத்தம் 110 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ அதுவும் முதல்வர் நாராயணசாமிக்கு மிகவும் நெருக்கமான ஜான் குமார் மீது ஆளுநர் உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.