பாரதியாரின் குயில் தோப்புக்கு சோதனை.. போலி பத்திர மோசடி.. பெண் தாசில்தார் உட்பட 11 பேர் மீது வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதியார் பாடிய குயில்தோப்பு இடத்தை போலி பத்திரம் தயாரித்து, பத்திரப் பதிவு செய்ததாக 11பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள குயில் தோப்பு என்ற பகுதி மகாகவி பாரதியார் அமர்ந்து கவிதைகள் எழுதிய பிரபலமான இடமாகும். தனியாருக்குச் சொந்தமான இந்த இடத்தை அரசு கையகப்படுத்தி, அதற்கு குயில் தோப்பு என முறையாக பெயர் சூட்டி, பாரதியார் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியிருந்த நிலையில், இந்த நிலத்திற்கான இழப்பீடு தொகையை பெற சிலர் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ரூபாய் 2 கோடி வரை இழப்பீடு தொகை பெற்றுள்ளதாக, அறவமுத்து, லட்சுமிநாரயணன் கிருத்திகா புதுச்சேரி நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, போலி ஆவணங்கள் மூலம் இழப்பீடு பெற்றவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இழப்பீடு தொகை பெற போலியான விற்பனை சான்றிதழ் கொடுத்த கோபிநாத், ராணி, அசோக் தூயவன், பாலாஜி ராஜா, பானுமதி, காயத்ரி தேவி, பிரபாத், ராஜலட்சுமி, ராஜசேகரன், சரஸ்வதி, மகுடேஸ்வரன் ஆகிய 11 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக பிரமுகரை சோடா பாட்டிலால் தாக்கிய அதிமுகவினர்... வாழப்பாடியில் பரபரப்பு
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, இதில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்ட ராணி புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி என்றும், அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் ஐந்தாவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பானுமதி தமிழகத்தை சேர்ந்த தாசில்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
11 பேர் மீதும் போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல், ஏமாற்றுதல், நீதிமன்றத்தில் தவறான தகவல் தருதல் என ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.