ஆஹா அபாரம்... குழி பனியாரம், எள்ளு அடை, முடக்கத்தான் தோசை.. புதுச்சேரியை கலக்கிய உணவு திருவிழா
Recommended Video
புதுச்சேரி:புதுச்சேரியில் நடைபெற்று வரும் சாலையோர உணவுத் திருவிழா வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
புதுச்சேரி அரசும் உழவர்கரை நகராட்சியும் இணைந்து சாலையோர உணவுத் திருவிழாவை கடற்கரை சாலை காந்தி திடலில் தொடங்கியுள்ளன. நாளை வரை நடைபெறும் இந்த திருவிழாவில் மொத்தம் 30 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
அரங்குகளில் தெருவோர விற்பனையாளர்களும், சுயஉதவிக் குழுக்களும் தாங்கள் தயாரித்த உணவு பதார்த்தங்களை காட்சிப்படுத்தினர். குழி பனியாரம், கேழ்வரகு அடை, முடக்கத்தான் தோசை, எள்ளு அடை, எள்ளு உருண்டை, பச்சபயறு உருண்டை பாரம்பரிய மற்றும் இயற்கை உணவு வகைகளை சுத்தமான முறையில் தயாரித்து, விற்பனைக்காக வைத்தனர்.
அவற்றை புதுச்சேரி மாநில மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பார்வையிட்டு, உணவுப் பொருள்களை ருசித்து பார்த்து மகிழ்ந்தனர்.சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தம் தேர்வு செய்யப்படுகிறது.
மேலும்,சிறந்த அரங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு, விழாவின் நிறைவில் பரிசுகள் வழங்கப்பட்டு, சாலையோர வியாபாரிகள் கௌரவிக்கப்படுகின்றனர். உணவு திருவிழாவில் புதுச்சேரி அரசு உணவு பாதுகாப்பு துறையினர், உணவு பாதுகாப்பு முறை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோன்று வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களுக்கு அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அதில், சுய உதவி குழுவினர் தயாரித்த காகித பொருள்கள், கலைநயம் மிக்க மண் பாண்டங்கள், மரப்பொருள்கள், தோல் பொருள்கள், ஆபரணங்கள், தேங்காய் நாரில் தயாரித்த பொருள்கள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன