என்னைப் பற்றி இனியும் பேசினால் அமைச்சர் தோலை உரிப்பேன்.. ஆவேசமடைந்த நாராயணசாமி!
புதுச்சேரி : என்னைப் பற்றியோ, காங்கிரஸ் பற்றியோ தொடர்ந்து பேசி வந்தால் அமைச்சர் லட்சுமி நாராயணனின் தோலை உரிப்பேன் என எச்சரித்துள்ளார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏவாக இருந்த லட்சுமி நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்து கடந்த ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது அவர் புதுச்சேரி மாநில அமைச்சராக இருக்கும் நிலையில், நாராயணசாமியை விமர்சித்து வருகிறார். அவருக்கு நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வருவதை விமர்சித்த நாராயணசாமி, தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கும் வேலையைத்தான் ஆளுநர் தமிழிசை செய்கிறார் எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், புதுச்சேரி சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசை செயல்படுவதை, உறுதி செய்யும் வகையிலேயே முதல்வர் ரங்கசாமியின் புலம்பல் உள்ளது. டம்மி முதல்வர் ரங்கசாமிக்கு ஆளுநரை எதிர்க்கும் திராணி இல்லை என்ச் சீண்டியுள்ளார் நாராயணசாமி.
தமிழ் கட்டாய பாட சட்டம் முறையாக அமல்படுத்தவில்லை.. என்னாச்சு? தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
அடிமாட்டு விலைக்கு
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி, "நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி அடிமாட்டு விலைக்கு விற்று
வருகிறார். சென்னை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட 27 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்ட உள்ளன. மோடி அரசின் கஜானா காலியாவதால் பொது சொத்துகளை விற்று ஆட்சி நடத்துகின்றனர்" எனக் குற்றம்சாட்டினார்.
பெயர் மட்டும் தமிழிசை
மேலும், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவா? சிபிஎஸ்இ வந்தால் தமிழ் பாடம் இருக்காது. இந்திதான் திணிக்கப்படும். தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கும் வேலையைத்தான் ஆளுநர் தமிழிசை செய்கிறார். இது புதிய கல்விக்கொள்கையை நுழைக்கும் வேலை. தமிழ் என பேசி மக்களை ஆளுநர் ஏமாற்றுகிறார். இதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்தார்.
ரங்கசாமி vs தமிழிசை
மேலும் பேசிய நாராயணசாமி, "ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. தமிழிசை தனது அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதால் தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கப்படுகின்றார். அரசு நிர்வாகத்தில் கோப்புகளில் காலதாமதம், ஆளுநர் தலையீடு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டே முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதல்வரை சுதந்திரமாக செயல்படவிடவில்லை.
டம்மி முதல்வர்
தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி அரசுக்கு என்ன ஒத்துழைப்பு கொடுக்கிறார் என பொது மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும். எத்தனை கோப்புகளுக்கு அவர் கையெழுத்திட்டார் என்பதை பகிரங்கமாக பட்டியலிட வேண்டும். புதுச்சேரி சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசை செயல்படுவதை, உறுதி செய்யும் வகையிலேயே முதல்வர் ரங்கசாமியின் புலம்பல் உள்ளது. டம்மி முதல்வராக உள்ள ரங்கசாமிக்கு ஆளுநரையோ, மத்திய அரசையோ எதிர்க்கும் தெம்பு, திராணி இல்லை.
தொல்லை இப்போது தான்
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநில முதல்வருக்கு எந்த தொந்தரவும் இல்லை. சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2019ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தினேன். தற்போது ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக பிரதமரை சந்திக்க எம்எல்ஏக்களை டெல்லி அழைத்துச் செல்வாரா?
தோலை உரிப்பேன்
என்னையும், வைத்திலிங்கம் எம்.பி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரை கட்சி மாறியுள்ள அமைச்சர் லட்சுமிநாராயணன் மண் குதிரைகள் எனக் கூறியுள்ளார். இந்த மண் குதிரைகள்தான், அவருக்கு காங்கிரசில் சீட் கொடுத்தது. இதேபோல் என்னைப் பற்றியோ, காங்கிரஸ் பற்றியோ தொடர்ந்து பேசி வந்தால் அமைச்சர் லட்சுமி நாராயணனின் தோலை உரிப்பேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். அவரது பல ரகசியங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றை வெளியிடுவேன்.
நான் பயப்பட மாட்டேன்
நான் விடுதலை புலிகளின் மிரட்டலையே எதிர்கொண்டவன். என் வீட்டில் வெடிகுண்டு வைத்தார்கள். அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கொள்கையில் உறுதியாக
இல்லை, கொள்கை முரன்பாடு உள்ள கட்சிகள் கூட்டணியில் நிலைக்க முடியாது. மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி தெருவில் இறங்கி போராடினால் நாங்களும் இணைந்து போராடத் தயார்." எனத் தெரிவித்தார்.