காரைக்காலில் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட மாணவன் பலி.. 3 மருத்துவர்கள் குழு அமைப்பு
புதுவை: படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனை சக மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவை புதுவை அரசு அமைத்தது.
புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மாலதி. இவர்களது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுசசேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் படிப்பில் கெட்டிக்காரர். அத்துடன் கலை நிகழ்ச்சியிலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

பள்ளி ஆண்டு விழா
பள்ளியில் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. பாலமணிகண்டன் நேற்றைய தினம் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது தனது தாய் மாலதியிடம் பாலமணிகண்டன், எனக்கு பள்ளியில் ஜூஸ் கொடுத்து அனுப்பியது யார் என கேட்டார்.

ஜூஸ்
நான் அது போல் எந்த ஜூஸையும் கொடுத்து அனுப்பவில்லையே என மாலதி அதிர்ச்சியுடன் சொன்னார். உடனே பாலமணிகண்டன் 3 முறை வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாலமணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலமணிகண்டன்
அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அதிர்ச்சி பாலமணிகண்டனுடன் படிக்கும் சகமாணவி அருள்மேரியின் தாய் சகாயமேரிதான் பள்ளி காவலாளி தேவதாஸிடம் எதையோ கொடுத்தார்.

காவலாளி
உடனே காவலாளியிடம் விசாரித்ததில் பாலமணிகண்டனின் தாய் அந்த சிறுவனுக்கு ஜூஸ் கொடுக்க சொன்னதாக சகாயமேரி கூறி ஒரு ஜூஸை கொடுத்தது தெரியவந்தது. சகாயமேரியிடம் விசாரித்ததில் தனது மகளை விட பாலமணிகண்டன் நன்றாக படிப்பதாக கூறியதால் ஆத்திரமடைந்த சகாயமேரி, பாலமணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டு இது போன்றதொரு இரக்கமற்ற செயலை செய்துள்ளார்.

காரைக்கால் அரசு மருத்துவமனை
இந்த நிலையில் தனது மகனுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனை சரியான சிகிச்சையை அளிக்கவில்லை என பெற்றோர் புகார் கூறியுள்ளனர். தனது மகனை மருத்துவமனையில் அனுமதித்தவுடன் நன்றாக இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என சொல்லிவிட்டு அரை மணி நேரத்தில் சிறுவன் இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.

மருத்துவக் குழு
இதையடுத்து மாணவன் இறப்பு குறித்து அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கு ஏதேனும் இருக்கிறதா என்பதை விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ், பாலச்சந்தர் ஆகியோர் அடங்கிய குழுவை புதுவை அரசு அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications