தமிழிசை செய்தது வரலாற்று பிழை... புதுவை மக்களின் உரிமை காக்க உயிர் தியாகம் செய்ய தயார் - நாராயணசாமி!
புதுச்சேரி: பெரும்பான்மையை நிருபிக்க கூறியுள்ள துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரலாற்று பிழை செய்துள்ளார் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
வருகிற 21-ம் தேதி மாலை காங்-திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள இருக்கிறோம் என்பதை அறிவிக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.
புதுச்சேரி மக்கள் உரிமை காக்க உயிர் தியாகம் செய்யவும் தயார் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி அரசியல் குழப்பம்
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுவை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
நாராயணசாமி அரசுக்கு ஆபத்து
இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டம் முடிந்த பின்னர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- பெரும்பான்மையை நிருபிக்க துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார், ஆளுநர் கொடுத்த கடிதத்தில் எதிர் அணியில் 14 பேர் குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் 3 பேர் நியமன உறுப்பினர்கள். ஆனால் அவர்களை பாஜக உறுப்பினர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை வரலாற்று பிழை
பாஜக எம்எல்ஏக்கள் என சட்டமன்ற பதிவேட்டில் இல்லை, அவர்களை பாஜகவாக அங்கீகரிக்க கடிதம் கொடுத்தனர், ஆனால் அப்போதைய சபாநாயகர் வைத்திலிங்கம் அது குறித்து முடிவு எடுக்கவில்லை. அதனால் துணைநிலை ஆளுநர் தமிழிசை கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருக்கிறது, மிகப்பெரிய வரலாற்று பிழையை தமிழிசை செய்துள்ளார், இது பற்றி விளக்கம் அளிக்க அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
உயிர் தியாகம் செய்ய தயார்
வருகிற 21-ம் தேதி மாலை காங்-திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள இருக்கிறோம் என்பதை அறிவிக்க உள்ளோம். காங்கிரசின் 10 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக உள்ளனர். ஆனால் 3 பேர் வெளியேற உள்ளதாக கொச்சைப்படுத்துகிறார்கள். புதுச்சேரி மக்கள் உரிமை காக்க உயிர் தியாகம் செய்யவும் தயார் என்று நாராயணசாமி கூறினார்.