"மக்களுக்கு எதுவும் செய்ய முடியல.. தினமும் மன உளைச்சல் தான்.." புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் குழு அங்குள்ள முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது அதிகாரம் இல்லாததால் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை என்று முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார்.
இப்போது புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக உள்ள நிலையில், என்ஆர் காங்கிரஸ்- பாஜக ஆகியோரின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்- பாஜக இடையேயான உறவில் சிக்கல் இல்லை எனக் கூறி வருகின்றனர்.
இருப்பினும், உள்ளே இரு தரப்பிற்கும் இடை பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் புதுச்சேரியில் தன்னால் மக்களுக்கு எதுவும் செய்ய முடிவதில்லை எனக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு “ஷாக்” கொடுத்த ரங்கசாமி! மாறும் புதுச்சேரி “கிளைமேட்”.. மத்திய அரசு மீது திடீர் “அட்டாக்”
புதுச்சேரி
புதுச்சேரி இப்போது யூனியன் பிரதேசமாகவே உள்ளது. இதன் காரணமாக அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு அதிகாரம் குறைவு. மாநில அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் தான் அதிகாரம் அதிகம். இதனால் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களின் தயவில்தான் அனைத்து திட்டங்களும் செயல்படுத்த வேண்டும் என்ற நிலையே உள்ளது. இதனால் புதுவைக்குத் தனியாக மாநில அந்தஸ்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்..
முதல்வர் ரங்கசாமி
இதற்கிடையே புதுச்சேரிக்குத் தனிமாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து மனு அளித்தனர். புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து பெறுவதற்கு முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும், சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்றும், புதுச்சேரி உள்ள சமூக நல அமைப்புகளை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
மன உளைச்சல்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்பதை அங்குள்ள ஒரு குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே அந்தக் குழுவைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது உச்ச நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகு, நமக்கு மரியாதையே இல்லை என்ற நிலையே உருவாகியுள்ளது என்று தெரிவித்த அவர், அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.
உண்மையான விடுதலை கிடைக்கவில்லை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களால் மக்களுக்கு எதுவுமே செய்து கொடுக்க முடியவில்லை என்று வேதனை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு முழு ஒத்துழைப்பைத் தருவதில்லை என்று தெரிவித்த அவர், மக்களுக்கு அரசு கொண்டு வரும் திட்டங்கள் முடக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பல்வேறு சிரமம்
தொடர்ந்து பேசிய அவர், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் ஆள்வதில் சிரமம் உள்ளது என்பது ஆள்பவர்களாக்கு மட்டுமே தெரியும். ஏதோ ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாகச் சிலர் கிண்டல் செய்கிறார்கள். உண்மையில் புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும்.. எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு எந்தவொரு சிரமமும் இருக்கக்கூடாது. இதற்காக மட்டுமே நான் மாநில அந்தஸ்தைக் கேட்கிறேன்" என்றார்.
அதிருப்தி
அங்கு பாஜகவுக்கும் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரங்கசாமியின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரின் நிகழ்ச்சியிலும் ரங்கசாமி சில அதிருப்தி கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது மத்திய அரசிடம் அடிக்கடி நிதி கேட்கும் சூழல் இருக்கக் கூடாது என்று கூறிய அவர், புதுச்சேரியைச் சிங்கப்பூர் போன்ற ஒரு வளர்ந்த பகுதியாக ஆக்க வேண்டும் என நினைத்ததாகத் தெரிவித்த ரங்கசாமி, இருப்பினும், நிர்வாக சிக்கல்களால் அதை தன்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.
புதுச்சேரி
மேலும், மத்திய அரசிடம் இருந்து ஒவ்வொரு திட்டத்திற்கும் அனுமதி வாங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்தாண்டு தமிழ்நாட்டுடன் புதுச்சேரிக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிகபட்சமாக என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வென்றது. பாஜக 6 இடங்களில் வென்ற நிலையில், சுயேச்சையாக வென்ற 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 நியமன எம்எல்ஏக்கள் எனச் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவே புதுவை சட்டசபையில் 12ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.