புதுச்சேரியில் லாக்டவுன் தளர்வுகள் - சனிபகவான், மணக்குள விநாயகர் ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம்
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஆலயங்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளதை 45 நாட்களுக்குப் பிறகு இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மூடப்பட்டிருந்த ஆலயங்களை திறக்க புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் நகரத்திலும் ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தனி மனித இடைவெளியுடன் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக வீசத்தொடங்கியது. தினசரி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் புதுச்சேரியில் கடந்த 45 நாட்களுக்கு முன்பாகவே தளர்வுகள் அற்ற லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
புதுச்சேரியில் கொரோனாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு ஆலயங்கள் மூடப்பட்டன. மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் இன்று முதல் தளர்வுகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆலயங்களிலும் அனைத்து வழிபாட்டுத்தளங்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் கடந்த 1 மாதகாலமாக மூடப்பட்டிருந்தது இந்நிலையில் மாநில அரசுகள் விதிமுறைகளுடன் இன்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன அதைத் தொடர்ந்து காரைக்காலில் உள்ள திருநள்ளாறு உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வரன் பகவான் கோவில் இன்று காலை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு வந்தனர். மேலும் கோவில் உள்ளே வரும் முன் கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின் சாமி தரிசனம் செய்தனர். சளி, காய்ச்சல் உள்ளவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.