இருளில் மூழ்கிய புதுவை- மின்சார ஒயர்களை துண்டித்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் நமசிவாயம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மின்துறை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாற்று ஏற்பாடாக மத்திய பவர்கிரீட்டில் இருந்து 24 அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர் என்றும் அம்மாநில மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க ஆளும் பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துவிட்டது. மின்சார வாரியம் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 5-வது நாளாக தொடருகிறது.

இதனால் புதுச்சேரி முழுவதும் தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. புதுச்சேரியில் நேற்று மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு வரை நீடித்தது. இதனால் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இன்றி புதுச்சேரி இருளில் மூழ்கியது. தொடர் மின்வெட்டு குறித்து புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் ராஜிவ் வர்மா, போலீஸ் டிஜிபி மனோஜ்குமார் லால், மின்துறை செயலர் அருண் ஆகியோருடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார்மயமாக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு மின்சார வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. பேச்சுவார்த்தைக்கும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் மின்சார வாரிய ஊழியர்கள்தான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
கடந்த சில நாட்களாக மின்சார வாரிய ஊழியர்கள் செயற்கையான மின்தடையை ஏற்படுத்தினர். ஆனாலும் அரசாங்கம் பொறுத்துக் கொண்டு அதனை சரி செய்து வந்தது. ஆனால் வில்லியனூர், பாகூர் உள்ளிட்ட பல இடங்களில் மின்சார ஒயர்களை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்திருக்கின்றனர். சில இடங்களில் பியூஸ் கேரியர்கள் பிடுங்கிச் செல்லப்பட்டுள்ளன. இதனால் மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆகையால் புதுச்சேரி மக்கள் தயவு செய்து அமைதி காக்க வேண்டும். இந்த பிரச்சனையில் புதுச்சேரி அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்ற வகையில் அத்துமீறி நடந்து கொண்ட மின்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும். தற்போது மாற்று ஏற்பாடாக மத்திய பவர்கிரீட்டில் இருந்து 24 அதிகாரிகள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் துணை மின் நிலையங்களில் அமைர்த்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.












Click it and Unblock the Notifications